ஸ்ரீரங்காவை கைது செய்ய தேடும் பொலிஸ்!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேவுக்கு அறிவிக்கப்பட்டது.
இதன்படி, விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததுடன், முக்கிய சந்தேக நபர் தற்போது வீட்டில் இல்லை என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், அவரைக் கண்டுபிடிப்பதற்காக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, இந்த சம்பவத்தின் சாட்சிகளாக தமது கட்சிக்காரர்கள் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், சாட்சிகளை விளக்கமறியலில் வைத்தால், வழக்கின் உண்மைகளை பொலிஸாரினால் சரிபார்க்க இயலாது என்றும் சட்டத்தரணி சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனையடுத்து முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதவான், சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எட்டு சந்தேக நபர்களில் நால்வரை மாத்திரம் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
ஏனைய நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் நவம்பர் மாதம் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
-(3)




