109 ஆவது “வடக்கின் பெரும் போரில்” பரியோவான் கல்லூரி வெற்றி
யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த ‘வடக்கின் பெரும்போர்’ என்று வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரி மற்றும் யாழ். பரியோவான் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கிடையிலான பெருந் துடுப்பாட்ட போட்டியில் பரியோவான் கல்லூரி 84 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
நேற்று முன்தினம் போட்டி ஆரம்பமானபோது துடுப்பெடுத்தாடிய பரியோவான் கல்லூரி 7 விக்கட்டுக்கள் இழப்புக்கு 300 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி மறுநாள் பிற்பகலுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 164 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இந்த நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை நேற்று தொடங்கிய பரியோவான் கல்லூரி 7 விக்கெட்டுக்களை இழந்து 136 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தி, மத்திய கல்லூரி தனது இரண்டாவது இன்னிங்சை ஆடுவதற்கு கேட்டுக்கொண்டது. இரண்டாவது இனிங்சிலும் துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய மத்திய கல்லூரி ஆட்டம் நிறைவு பெறுவதற்கு 5 ஓவர்கள் இருந்த நிலையில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 188 ஓட்டங்களை பெற்றது.
இந்த போட்டியின் சிறந்த துடுப்பாட்டவீரராக சென்.ஜோன்ஸ் கல்லூரியின் ஜெனிபிளமிங், சிறந்த பந்துவீச்சாளராக சென்.ஜோன்ஸ் கல்லூரியின் கிசாந்திகன், சிறந்த களத்தடுப்பாளராக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் கௌதமன், சிறந்த சகல துறை வீரராக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் திரேசன், சிறந்த விக்கெட் காப்பாளராக சென்.ஜோன்ஸ் கல்லூரியின் கபில்ராஜ், ஆட்டநாயகனாக சென்.ஜோன்ஸ் கல்லூரியின் ஜெனிபிளமிங் ஆகியோர் தெரிவாகினர்.
இன்று நடந்த போட்டியுடன் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பரியோவான் கல்லூரி 35 போட்டிகளிலும், மத்திய கல்லூரி 27 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. 39 போட்டிகள் சமநிலையிலும், 7 போட்டிகளின் முடிவுகள் தெரியாத நிலையிலும், 1 போட்டி கைவிடப்பட்டும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.























