65,000 வீட்டுத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: வலியுறுத்துகிறார் சுமந்திரன்
வடக்கு, கிழக்கில் அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீடுகள் கொண்ட திட்டத்தினை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டுமென எதிர்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் நேற்று சபையில் பகிரங்க கோரிக்கை விடுத்தார்.
எமது மக்களுக்கு வீடுகள் அவசிய தேவையாக காணப்படுகின்றது. அரசாங்கம் அதற்காக முன்னெடுக்கும் செயற்றிட்டத்தை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் அவை நீண்டகாலப் பயன்பாட்டைக் கொண்டிருப்பது அவசியமானது. உருக்கு உற்பத்தியாளர்கள் தமது கழிவுகளை போடுவதற்கு இடங்களை தேடிக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று வியாழக்கிழமை நாட்டின் பொருளாதாரம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும்உரையாற்றுகையில்
“வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கின்றது. எமது மக்களுக்கு 137 ஆயிரம் வீடுகள் தேவையாகவுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவற்றைப் படிப்படியாக முன்னேற்ற வேண்டுமென்ற கோரிக்கையை நாம் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்ற நிலையில் 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்திருப்பதை நாம் வரவேற்கின்றோம்.
ஏற்கனவே இந்திய அரசாங்கம் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணியை முன்னெடுத்துவருகின்றது. இந்திய அரசாங்கத்தின் அந்த செயற்பாடு வரவேற்கப்பட வேண்டியதாகும். இந்திய அரசாங்கம் வீடுகளை நிர்மாணிப்பதற்காக 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை இலவசமாக வழங்குகின்றது. அந்தப் பணம் போதுமானதாக அல்ல என்ற கருத்துக்கள் சிலவும் காணப்படுகின்றன.
எனினும் அப்பணத்தினூடாகவே வீடுகள் நிர்மாணிக்கப்படுவதையும் அவதானிக்க முடியும். இவ்வாறான நிலையில்தான் தற்போது 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இத்திட்டத்தின் பிரகாரம் அமைக்கப்படும் வீடொன்றிற்கு 21 இலட்சம் ரூபா செலவிடப்படுகின்றது.
எற்கனவே 6 முதல் 7 இலட்சத்துக்கிடையில் முழுமைான வீடொன்றை நிர்மாணிக்க முடியுமென கூறப்பட்டுள்ள நிலையில் ஏறக்குறைய அத்தொகையிலிருந்து மூன்று மடங்கு அதிகரித்த தொகையிலேயே இவ் வீடு அமைக்கப்படவுள்ளது.
உண்மையிலேயே இந்த 21 இலட்சம் ரூபா தொகையில் எமது மக்கள் தமது சொந்தமண்ணில் மூன்று தலைமுறையினர் வாழக்கூடிய வகையில் கல் வீடு ஒன்றை அமைத்துக் கொள்ள முடியும். சாதாரணமாக சகல வசதிகளையும் கொண்ட கல்வீடொன்றை 10 இலட்சம் ரூபா தொகைக்கு அமைத்துக் கொள்ள முடியும்.
ஆகவே நீடித்திருக்ககூடிய வகையில் இந்த திட்டத்தை மாற்றியமைக்க வேண்டுமென்றே இச் சந்தர்ப்பத்தில் கோரிக்கை விடுக்கின்றேன். இந்தவீடு தொடர்பாக அனுபவம் வாய்ந்த பொறியியளாலர்களிடத்தில் கலந்தாலோசித்தேன். அவர்களின் கருத்துக்களை முழுமையாக பெற்றுக் கொண்டு குறித்த வீட்டுத்திட்டத்தின் மாதிரி வீடொன்றை நேரில் சென்று பார்வையிட்டிருந்தேன். தளபாடங்கள், மின்விசிறி, ஏனைய உபகரணங்கள் சூரிய சக்தியைப் பெறும் கலம் என பலவசதிகள் கொண்டு காணப்படுகின்றன.
ஆனால் உருக்கிலான பகுதிகளில் பொருத்தும் இடங்களில் இடைவெளிகள் காணப்படுகின்றன. அவற்றின் பாகங்களை அமைக்கும்போது வீடே அசைகின்றது. சிவர்கள் விரைவில் உடைந்துவிடும் நிலைமையும் காணப்படுகின்றது. வெப்பத்தில் எவ்வாறு அதன் பாதுகாப்பு காணப்படும் என்பது குறித்து முழுமையான விபரங்கள் இல்லை.
குறித்த வீட்டில் பெணணொருவர் இருந்தார். அந்த வீடு தொடர்பாக கேட்டபோது அவர் மகிழ்ச்சியாக தனது கருத்துக்களை கூறினார். அவர்களின் உடனடித் தேவைக்கு அதுபோதுமானதாகவுள்ளது. ஆனால் பருவகால மாற்றங்களின்போதே வீட்டின் யதார்த்ததை உணர்ந்து கொள்ள முடியும். அதுமட்டுமன்றி அந்த வீட்டை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் பொருட்களை மீளப் பெற்றுக்கொள்ளக்கூடியமா என்பது தொடர்பாகவும் புரியாத நிலைமையிலேயே மக்கள் உள்ளனர்.
அப் பகுதியில் கடமையிலிருந்த பொறியியலாளருக்கே அவ்வாறான வீடுகள் தொடர்பான தகவல்களை அறிந்து கொண்டிருக்கவில்லை என்பதை அவரோடு உரையாடும்போதே அறிய முடிந்தது. ஆகவே நான் மீண்டும் கூறுகின்றேன். வீடுகளை எமது மக்களுக்காக வழங்க முன்வந்திருப்பதையிட்டு அரசாங்கத்திற்க நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். ஆனால் குறைபாடுகள் தொடர்பில் கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது.
இத்திட்டத்திற்காக அரசாங்கம் ஒரு மில்லியன் டொலர்களை செலவிடுகின்றது. அவ்வாறான பெருந்தொகைப் பணத்தை செலவிடும்போது அது பயனுள்ளதாக அமைய வேண்டும். மீளச் செலுத்தும் கடன்களைப் பெற்றே அரசாங்கம் இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்கின்றது. ஆகவே குறித்த திட்டத்தினை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறான திட்டங்கள் சமூகத்துடன் சமமானவகையில் நிலைத்திருக்ககூடிய வகையில் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் அமைய வேண்டும்.”
R-06