செய்தி ஊடகங்களை கட்டுப்படுத்தும் சுயாதீனப் பேரவை
-அ.நிக்ஸன்-
அச்சு, மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் New Media ஆகிய செய்தி ஊடகங்களைக் கட்டுப்படுத்த சுயாதீன பேரவை ஒன்றை அமைப்பதற்கான வரைபு ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அந்த வரைபு தற்போதைய நிலையில் அவசியமானதுதான். ஆனால் செய்திகளை தரநிர்ணயம் செய்வது என்ற போர்வையில் செய்தியாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்தும் போக்குகளை ஏற்க முடியாது.
கலந்துரையாடலின் அழுத்தம்
இந்த சுயாதீன பேரவையை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் கொழும்பு, யாழ்ப்பாணம் மட்டக்களப்பு போன்ற இடங்களில் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்தக் கலந்துரையாடல்கள் யுத்தகாலத்தில் ஒன்றினைந்து செயற்பட்ட ஊடக அமைப்புகள் மற்றும் மூத்த ஊடகத்துறையினர் ஆகியோருடன் பேசாமல் வேறுவகையான அணுகுமுறை ஒன்றை பின்பற்றி இந்த பேரவைக்கான வரைபு தயாரிக்கப்பட்டுள்ளதாக தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று சமீபத்தில் கொழும்பு இதழியல் கல்லூரி மண்டபத்தில் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் எற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
அந்தக் கலந்துரையாடலில் செய்தி ஊடகங்களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து பேசப்பட்டிருக்கின்றது. ஆனால் செய்தி ஊடகங்களை தரம்பிரித்து அந்தக் கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் New Media எனப்படும் பல இணைய செய்தித்தளங்கள் இயங்குகின்றன. அவற்றில் சில செய்தித் தளங்கள் தனிப்பட்ட பிரச்சினைகள், மற்றும் ஊடக ஒழுக்க விதிகளுக்கு மாறாக செய்திகளை வெளியிடுகின்றன. குறிப்பாக குடும்ப பிரச்சினைகள், பெண்கள் பற்றிய தவறான கருத்துகளை நேரடியான படங்களுடன் சில செய்தித் தளங்கள் வெளியிடுகின்றன.

பிரதான ஊடகங்கள்
ஆகவே அவ்வாறன செய்தித் தளங்களை கட்டுப்படுத்த அல்லது விசாரணை நடத்தி வெளியிடப்பட்ட செய்தி குறித்தும் அந்த செய்தி சேகரிக்கப்பட்ட மூலத்தையும் கேட்டு அறிந்து சட்ட நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. அவ்வாறு விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதனை ஊடக ஜனநாயக மீறலாகவும் கருத முடியாது. ஆனால் பிரதான ஊடகங்களை அவ்வாறு கட்டுப்படுத்த முடியாது. குறிப்பாக பிரதான ஊடங்களில் வெளிவரும் அரசியல் பொருளாதாரம் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் விமர்சனங்கள் பற்றிய மூலத்தை விசாரணைக்கு உட்படுத்த முடியாது. தாவது குப்பைத் தனமாக செய்தி எழுதும் செய்தியாளனையும் சமூக விடயங்களை முக்கியப்படுத்தி எழுதும் செய்தியாளனையும் ஒரே தராசில் நிறுத்திப் பார்க்க முடியாது.
பிரதான ஊடகத்தில் பிரசுரிக்கப்பட்ட செய்தி ஒன்றின் மூலம் தொடர்பாக குறித்த அந்த செய்தி எழுதிய செய்தியாளரைத் தவிர வேறு யாருக்கும் செய்தி எடுக்கப்பட்ட மூலம் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் கூட குறித்த அந்த செய்தி தொடர்பாக செய்தி எழுதிய செய்தியாளனிடம் செய்தியின் மூலத்தை கேட்க முடியாது. ஆகவே செய்தி ஊடகங்களை கட்டுப்படுத்துவது என்ற போர்வையில் பிரதான செய்தி ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் குறித்து உயர் நீதமன்ற விசாரணையில் கூட செய்தியின் மூலத்தை கேட்க முடியாது என்ற விதிமுறைகள் அரசாங்கம் தயாரித்த வரைபில் இல்லை.
சுயாதீன பேரவை என்ற அடிப்படையில்
வெறுமனே சுயாதீன பேரவை என்ற அடிப்படையில் அரசாங்கத்தையும் அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகளை காப்பாற்றும் நடவடிக்கைகளை அங்கீகரிக்க முடியாது. இந்த விடயங்களை ஊடக அமைப்புகள் வலியுத்தி வருகின்றன. வெளியிடப்பட்டுள்ள வரைபில் செய்தியாளர்களின் சுதந்திரம் சுயாதீனம் பாதுகாக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மறுபுறத்தில் செய்தி ஒன்று தொடர்பாக விசாரணை நடைபெறும்போதும் நீதிமன்றத்தில் செய்தியின் மூலத்தை செய்தியாளர் வெளியிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஆகவே செய்தியின் மூலத்தை வெளியிட வேண்டும் என்ற அந்த வாக்கியம் ரத்துச் செய்யப்பட வேண்டும். ஏற்னகவே நடைமுறையில் உள்ள பத்திரிகைப் பேரவை இவ்வாறான விதிமுறைகளை கொண்டிருக்கின்றது என்ற காரணத்தினால்தான் ஊடக அமைப்புகள் மூத்த ஊடகவியலாளர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டனர். அதற்கு மாற்றாகவே 2003ஆம் ஆண்டு பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவும் ஸ்தாபிக்கப்பட்டது.

புதிய சட்டம் அவசியமானது
ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பத்திரிகைப் பேரவையை மீண்டும் செயற்பட ஏற்பாடு செய்தபோதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால் தற்போது நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்து மீண்டும் ஊடகங்களை கட்டுப்படுத்த அவ்வாறான நடைமுறைகளை தயார்படுத்தி வருகின்றமை எந்த அடிப்படையில் என்பதுதான் இங்கு கேள்வி. காலத்தின் மாறுதல்களுக்கும் தவல்தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் ஏற்ப ஊடக ஒழுக்கநெறிகளை பாதுகாப்பதற்கு புதிய சட்டம் அவசியம் என்ற கருத்துக்கு மாற்றுக்கருத்தில்லை.
ஆனால குறிப்பிட்ட சில நபர்களுடன் மாத்திரம் கலந்துரையாடிவிட்டு தேசிய பாதுகாப்பு என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு ஊடகங்களின் ஒழுக்க விதிகளை நெறிப்படுத்த புதிய சட்டங்கள் தேவை என்று கூறுவதை ஏற்கமுடியாது. ஏனெனில் ஜனநாயக சூழலில் அதுவும் 2009ஆம் ஆண்டின் பின்னரான அரசியல் சூழலில் ஜனநாயக வழியில் இடம்பெறும் போராட்டங்களை தடுப்பதற்கு ஏதுவாக ஊடகங்களை கட்டுப்படுத்த நல்லாட்சி அரசாங்கம் முற்படுகின்றது என்ற சந்தேகம் ஊடக அமைப்புகள் மத்தியில் எழுந்துள்ளன. எனவே சுயாதீன பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் யாராக இருக்க வேண்டும் என்பதை வெளிப்படைத் தன்மையுடன் அரசாங்கம் கலந்துரையாட வேண்டும்.
ஏற்புடைய உரையாடல் அவசியம்
அதேவேளை சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த முடியாத பிரச்சினை உலகலாவியரீதியில் காணப்படுகின்றது. ஒழுக்கம், பொறுப்பு, சமூக உணர்வுகள் என்பதை தாண்டி ஒருவரை ஒருவர் சீண்டி விடுகின்ற நிலையும் குடும்ப பிரச்சினைகளை அல்லது தனிப்பட்ட முரண்பாடுகளை தெருவுக்கு இழுக்கின்ற செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. ஆகவே சமூக ஊடகங்களையும் கட்டுப்படுத்த சட்டம் அவசியம். செய்தி ஊடகங்களை கட்டுப்படுத்த நினைக்கும் அளவுக்கு சமூக ஊடகங்களையும் கட்டுப்படுத்தி சமூக சீரழிவுகளை தடுக்க அரசாங்கம் முற்பட வேண்டும்.
ஏனெனில் சமூக ஊடகங்களில் ஊடக ஒழுக்க விதிகளுக்கு மாறாக வெளிவரும் சில செய்திகள் தகவல்கள் போன்றவற்றை சமூக ஊடகங்களை மேற்கோள்காட்டி சில பிரதான ஊடகங்கள் வெளியிடுகின்றன. பின்னர் அதனால் வரும் பாதிப்புக்களில் இருந்து தப்பித்துவிடவும் முற்படுகின்றன. எனவே இவற்றையெல்லாம் ஆழமாக சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதேவேளை கொல்லப்பட்ட, காணாமல்போன ஊடகவியலாளர்கள் பற்றிய விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதுதான் ஊடக ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான உண்மையான வழி.




