அமெரிக்க குடியுரிமை இருந்தாலும் அங்கு சென்றால் புலிகள் கொன்றுவிடுவார்கள்: கோதாபாய
“அரசியல்வாதிகள் என்னைக் கைது செய்வதற்கு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அத்துடன் சிலர் உயிர் அச்சுறுத்தலும் விடுத்து வருகின்றனர். என்னிடம் அமெரிக்கக் குடியுரிமை உள்ளது. ஆனால் நான் அங்கு சென்றால் புலிகளின் ஆதரவாளர்கள் கொன்று விடுவார்கள்” என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது:
“நான் எந்தக் குற்றங்களிலும் ஈடுபடவில்லை. ஆனால் என்னைக் கைது செய்யப்போகின்றனர் என அரசியல்வாதிகள் மிரட்டுகின்றனர். அத்துடன் என்னைக் கொலை செய்யப் போகின்றனர் எனவும் அவர்களில் சிலர் மிரட்டுகின்றனர்.
நான் அரசியல்வாதியல்ல தவிர அரசியல் கட்சி ஒன்றில் உறுப்பினராகக் கூட இருக்கவில்லை. அப்படியிருக்கையில் எந்த அடிப்படையில் என்னைக் கைது செய்யப்போகிறார்கள். இந்த அரசாங்கம் என்னைப் பழிவாங்கும் நடவடிக்கையில் துரத்தித் துரத்தித் துன்பங்களைத் தருகின்றது.
நான் அமெரிக்கக் குடியுரிமை வைத்திருக்கிறேன். ஆனால் அங்கு செல்ல மாட்டேன். ஏனெனில் அங்கு சென்றால் என்னைப் புலிகளின் ஆதரவாளர்கள் நிச்சயம் கொன்று விடுவார்கள்” என்றார்.




