இலங்கை மின்சார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புரோட்லண்ட் நீர்மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
இலங்கை மின்சார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புரோட்லண்ட் நீர்மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லக்ஷபான பொல்பிடிய பிரதேசவாசிகள் கடந்த திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொல்பிடிய நீர்மின் நிலையத்திற்கு கீழாக களனி கங்கையை மறித்து அணை கட்டி யடியன்தொட பிரதேசத்திற்கு சுரங்கப்பாதை வழியாக நீர் கொண்டு செல்லப்பட்டு அங்கு 150 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொல்பிடிய பிரதேசவாசிகளின் பிரதான வாழ்வாதாரமாக விளங்கும் தேயிலை தோட்டங்களுக்கு குறைந்த மதிப்பீட்டை வழங்கி குறித்த நீர்மின் திட்டத்திற்கான சுரங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சுரங்க அகழ்வுகளில் அதிக வெடிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அதனால் சுமார் 34 வீடுகள் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
முறையான சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையின்றி ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தினால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், இந்த சுரங்க அகழ்வு நடவடிக்கையால் தாகம்பிடிய மாதெனிய பிரதேசத்தில் சுமார் 500 வீடுகள் இடிந்துவிழும் அபாயம் நிலவுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், இந்த நீர்மின் திட்டத்தை முறையான சுற்றுச்சூழல் மதிப்பீட்டுடன் முன்னெடுத்து தங்களது பிரச்சினைகளுக்கு வெகுவிரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


























