தேசிய அரசு சிறுபான்மை சமூகத்தை நசுக்குமானால் அதனை ஒன்றுசேர்ந்து எதிர்ப்போம்: அமைச்சர் இராதா கிருஸ்ணன்
இந்த நாட்டில் அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கம் சிறுபான்மை சமூகத்தினை நசுக்கக்கூடிய சூழ்நிலையேற்படுமானால் அதனை எதிர்க்க அனைத்து சிறுபான்மையினரும் எதிர்க்க ஒன்றுசேரவேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதா கிருஸ்ணன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு குருக்கள்மடம் சிவநெறி மன்றம் நடாத்தும் அறநெறிக்கலை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் நேற்று திங்கட்கிழமை மாலை குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
சிவநெறி மன்றத்தின் தலைவரும் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தலைவருமான வ.குணசேகரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
அறநெறி என்பது ஒவ்வொரு மனிதனையும் நல்வழிப்படும் ஒரு நிலையமாகவுள்ளது.ஒவ்வொரு சமயத்திலும் வௌ;வேறு வழிபாட்டு முறைகள் உள்ளன.ஆனால் அவை எல்லாம் ஒரு இடத்திலேயே சேருகின்றது.எந்த மதத்தினையும் நாங்கள் குறைத்து மதிப்படமுடியாது.எமது மதத்தினை நாங்கள் மதிப்பதுபோன்று பிறமதங்களையும் மதிக்கவேண்டும்.அதுவே நாங்கள் அறநெறியில் வழிநடத்தும் விடயமாகும்.
ஒரு சமயத்தின் வளர்ச்சி அந்த சமூகத்தின் வளர்ச்சியாக பார்க்கப்படுகின்றது.ஒரு சமூகம் வளரவேண்டுமானால் அந்த சமூகத்தின் சமயம் வளர்ச்சிபெறவேண்டும்.இல்லாதுபோனால் அந்த சமூகத்தின் கலாசாரம்,பண்பாடு மங்கிவிடும் நிலையேற்படும்.
எமது எதிர்காலம் நல்லமுறையில் அமையவேண்டுமானால்,நாங்கள் சமாதானமாக சந்தோசமாக வாழவேண்டுமானால் நாங்கள் அறநெறியை பின்பற்ற வேண்டும்.நாங்கள் எங்கெங்கு ஏழை குழந்தைகள் உள்ளதோங்கு அங்கு நாங்கள் உதவிகளை செய்யும்போதே நாம் சிறந்த நற்பிரஜைகளாக,சிறந்த சமூகமாக வளரமுடியும்.
யுத்தத்திற்கு பின்னர் வடகிழக்கில் இருக்கின்ற மக்கள் கடந்த கால மனநிலையில் இருந்து மீட்சிபெறுவதற்கு இவ்வாறான அறநெறிகள் வழியையேற்படுத்தும். இந்த நாட்டின் ஆட்சி இன்று மாற்றப்பட்டுள்ளது.அதேபோன்று கிழக்குமாகாணத்தில் ஆட்சிமாற்றம் செய்யப்பட்டு இரண்டு அமைச்சர்கள் வந்துள்ளார்கள்.இது மிகவும் மகழ்ச்சியான விடயமாகும்.
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு முதலமைச்சர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும் விட்டுக்கொடுப்புடன் இரண்டு அமைச்சுகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதன்மூலம் கிழக்கு மாகாண மக்களுக்கு சேவைசெய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இன்று நாட்டில் தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.இந்த தேசிய அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்கு இடையூரை ஏற்படுத்தாமல் அவர்களை பாதுகாப்பதாக அமையுமானால் அவற்றினை நாங்கள் ஏற்றுக்கொண்டு ஆதரவளிப்போம்.
ஆனால் இது சிறுபான்மை மக்களை நசுக்கக்கூடியதான சூழ்நிலையை ஏற்படுத்துமானால் சிறுபான்மையினத்தவர்கள் அனைவரும் இணைந்து அதனை எதிர்க்ககூடிய சூழ்நிலையை ஏற்படுத்தவேண்டும். அதனை இந்த நாட்டில் எந்த சிறுபான்மை சமூகம் செய்தாலும் அதற்கு அனைவரும் ஒன்றுபட்டு ஆதரவளிக்கவேண்டிய கால சூழ்நிலை உருவாகியுள்ளது.இதனை எதிர்காலத்தில் சிந்தித்து செயற்படவேண்டும்.
அதற்காகத்தான் இன்று மலையத்துக்கும் வடக்கு கிழக்குக்கும் ஒரு உறவுப்பாலமாக நான் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றேன்.
















