லீனா மணிமேகலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் சுசி கணேசன்
மீ டூ பிரசாரத்தை பயன்படுத்தி தன் மீது பொய் குற்றச்சாட்டை கூறிய லீனா மணிமேகலை மீது இயக்குநர் சுசி கணேசன் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். பெண்கள் தங்கள் மீது நடந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி மீடூ இயக்கம் மூலமாக இணைய தளத்தில் வெளிப்படையாக பேசி வருகின்றனர். ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த மீ டூ விவகாரத்தில் ஏராளமான பிரபலங்கள் பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இயக்குநர் சுசி கணேசன் மீது லீனா மணிமேலை பாலியல் புகார் தெரிவித்திருந்தார். லீனாவின் புகாரை மறுத்து இயக்குநர் சுசி கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் மீ டூ இயக்கத்தை சொந்த பழிவாங்களுக்காக லீனா மணிமேலை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டிய இயக்குநர் சுசி கணேசன், தன் மீது அவதூறு பரப்பியதால் லீனா மணிமேகலை மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். மீ டூ பிரசாரத்தை தவறாக பயன்படுத்தி தன் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளதாகக் கூறி லீனா மணிமேகலை மீது சைதாப்பேட்டை 9வது நீதிமன்றத்தில் இயக்குநர் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். (15)




