வடிவேலு பட வசனம் டிரெண்டாவது முட்டாள்தனமானது- காயத்ரி ரகுராம்
வடிவேலு நடித்த பிரெண்ட்ஸ் படத்தின் காமெடி காட்சி 2 நாட்களாக சமூகவலைதளங்களில் உலக அளவில் டிரெண்டாகி வருகிறது.மோடி பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறும் நாளில் அவரது எதிர்ப்பாளர்களான தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் இந்த பரபரப்பை ஏற்படுத்தியதாக மோடி ஆதரவாளர்கள் குறை கூறி வருகிறார்கள்.
பா.ஜனதாவில் சில காலம் இருந்துவிட்டு தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் காயத்ரி ரகுராம் இதை கண்டித்து பதிவிட்டு இருந்தார். காயத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நான் சில மக்களுக்காக வருத்தப்படுகிறேன். ஒரு சினிமா காட்சியை வைத்து இவ்வளவு காமெடி செய்ய என்ன அவசியம்.அதை வைத்துப் போடப்படும் மீம், ஹேஷ்டேக் போன்ற விஷயங்கள் எல்லாம் தேவையில்லாத ஒன்று. தேவையில்லாத ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. நம்முடைய நக்கல்தனத்தாலும், வெட்டித்தனத்தாலும் முட்டாளாக தெரியப் போகிறோம்’ என கோபமாக பகிர்ந்து இருந்தார்.
அதற்கு கமெண்டில் குவிந்த மோடி எதிர்ப்பாளர்கள் ‘மோடியை டிரெண்ட் பண்ணாததால் கோபம் வருகிறதா?’ என்பது போல் கேட்டிருந்தனர்.இதுபோல் தொடர்ந்து மோடியை ஒப்பிட்டு கமெண்ட் வரவும் அதற்கு இன்னொரு டுவிட்டைப் பகிர்ந்திருந்தார் காயத்ரி ரகுராம். அதில், ‘மோடிஜிக்கு எதிராக இதை நீங்கள் செய்ய நினைத்தால் இது முட்டாள்தனமானது.
இது நம்மை முட்டாள்தனமாகக் காட்டும் செயல். மற்ற நாடுகளில் இருக்கும் மக்கள் நமக்கு மூளையில்லை என்று நினைத்து விடுவார்கள். முக்கால்வாசி ஆட்கள் இந்த காமெடியையே புரிந்துகொள்ளவில்லை. இது ஏன் சுற்றிக்கொண்டிருக்கிறது? முட்டாள்தனம்’ என கூறி இருக்கிறார்.(15)




