நம்பிக்கையினை ஏற்படுத்துவதன் மூலமே அமைதியை உருவாக்கமுடியும் :மட்டக்களப்பில் ஜனாதிபதி (படங்கள்)
“இந்த நாட்டில் யுத்தம் ஒன்று ஏற்படுவதற்கு இடமளிக்காதவாறு நாங்கள் செயற்படவேண்டும்.யுத்தம் ஒன்று ஏற்படுவதை தடுப்பதற்கு நாங்கள் குண்டுகள் மூலமாக துப்பாக்கிகள் மூலமாக அல்ல,எல்லா மொழிபேசும் மக்கள் மத்தியிலும் எல்லா மதங்களின் மத்தியிலும் நம்பிக்கையினை ஏற்படுத்துவதன் மூலமே அந்த நிலைமையினை உருவாக்கமுடியும் ” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
போதகர் ஒன்றியத்தின் விளஸ் ஸ்ரீலங்கா அமைப்பினால் மட்டக்களப்பில் இன்று மாபெரும் பாஸ்கா பண்டிகை நடாத்தப்பட்டது. இந்த பண்டிகையில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
ஒரு நாட்டினை கட்டியெழுப்புவதற்கு மிகத் தேவையானது மதமும் மதக்கோட்பாடுகளும் தான். மதங்கள் அனைத்தும் நல்லவர்களை சமூகத்தில் உருவாக்குவதற்கு போதிக்கப்படுபவை. ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு எங்களுக்கு மதரீதியான ஒரு நோக்கு இருக்கவேண்டும். இயேசுபிரான் எமக்குக் காட்டிய வழி மனிதாபிமான மனிதநேயம்கொண்ட சமூகத்தினை கட்டியெழுப்புவதற்கான வழியென்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
நல்ல சமூகம் ஒன்றினை கட்டியெழுப்புவதற்கு ஒழுக்கமான சமூகம் ஒன்றை இந்த நாட்டில் உருவாக்குதற்கு இவ்வாறான போதனைகள் எங்களுக்கு அவசியம்.இந்த போதனையெல்லாம் அகிம்சை,அன்பு,கருணை,இரக்கம் இவைமக்களிடம் இருக்கவேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படுகின்றது.
இவையெல்லாம் ஒன்றுபடும்போதுதான் இந்த நாட்டுக்கு மட்டுமன்றி சமூகத்துக்கு மக்களுக்கு தேவையான மனிதாபிமானம் மனித நேயம் அங்கேதான் இருக்கின்றது என்று கூறுகின்றோம்.
ஒரு சமூகமோ நாடோ கட்டியெழுப்ப படுவதற்கு சமாதானம் மிகமிக அவசியம்.எனவே நாங்கள் யார்மீதும் கூரோதம் காட்டக்கூடாது.அந்த கூரோதம் பகைமையூடாக ஒரு நாளும் நல்ல ஒரு சமூதாயம் உருவாகப்போவதில்லை.யேசு கிறிஸ்து இது தொடர்பில் எங்களுக்க நல்ல வழியை காட்டியுள்ளார்.
எனவே தேவனின் ஆசிர்வாதம் ஊடாக நல்ல சமூதாயத்தினை உருவாக்கக்கூடிய வழிகாட்டப்படுகின்றது.மனிதன் மனிதனாக மற்றைய மனிதன் மீது அன்பு,இரக்கம் காட்டவேண்டும்.அப்போது சமூகத்தில் இருக்கின்ற மற்றையவர்களும் மற்றவர்கள் மீது அன்பு,இரக்கத்தினை காட்டுவார்கள்.நல்ல மனிதர்கள் உருவாகுவதற்கு ஒவ்வொருவரும் மற்றவர்களை அறிந்துகொண்டுதெரிந்துகொண்டு அன்பைக்காட்டவேண்டும்.
யேசுகிறிஸ்துவின் போதனைகள் மூலமாக வழிகாட்டுதல்கள் மூலமாக நல்ல மக்களை,நல்ல சமூதாயத்தினை உருவாக்குவதற்காக நல்லபோதனைகளை அளித்துள்ளார்.
இந்த நாட்டில் வாழும் மக்கள் மத்தியில் பலவிதமான மக்கள் வாழ்கின்றனர்.அவ்வாறான மக்களுக்கு தங்களது மதங்களை பின்பற்றுவதற்கான முழுமையான சுதந்திரம் இருக்கவேண்டும்.பலவிதமான மொழியை பேசக்கூடிய மக்களாக இருக்கலாம்.
எமது அரசாங்கம் எல்லா மக்கள் மத்தியிலும் சகவாழ்வினையும் ஒருவர் ஒருவரை புரிந்துகொள்ளக்கூடிய புரிந்துணர்வினையும் உருவாக்கவேண்டியதே எங்கள் கடமையாகவுள்ளது.அனைவர் மத்தியிலும் நம்பிக்கை விசுவாசம் உருவாகவேண்டும்.
இந்த நாட்டில் யாரும் சந்தேகத்தோடு,பீதியோடு வாழும் அவசியம் இல்லை.ஒரு மனிதர் கூட்டத்தினால் இன்னொரு மனிதர் கூட்டத்தினை அச்சுறுத்துவதற்கு பயப்படுத்துவதற்கோ எதுவித தேவையும் இல்லை.
சமூதாயத்தில் வாழக்கூடிய அனைத்து மக்களும் அன்போடும் புரிந்துணர்வோடும் சகவாழ்வோடும் வாழக்கூடிய சூழ்நிலையினை எமது புதிய அரசாங்கம் உருவாக்கும்.
கடந்த ஜனவரி நடந்த தேர்தலில் மட்டக்களப்பு மக்கள் என்னை முழுமையாக ஆதரித்தார்கள்.என்மீது நம்பிக்கை வைத்தார்கள்.அனைத்து மதங்களையும் கடைப்பிடிக்கும் மக்களும் எல்லா மொழியை பேசும் மக்களும் என்மீது நம்பிக்கைவைத்தார்கள்.அந்த சமூகத்தின் நம்பிக்கையினை கட்டியெழுப்புவதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும்.
எமது நாட்டில் நிலவிய நீண்டகால யுத்தம் காரணமாக நாங்கள் பல கஸ்டங்களை அனுபவித்தோம்.இந்த நாட்டில் அவ்வாறான யுத்தம் ஒன்று ஏற்படுவதற்கு இடமளிக்காதவாறு நாங்கள் செயற்படவேண்டும்.யுத்தம் ஒன்று ஏற்படுவதை தடுப்பதற்கு நாங்கள் குண்டுகள் மூலமாக துப்பாக்கிகள் மூலமாக அல்ல,எல்லா மொழிபேசும் மக்கள் மத்தியிலும் எல்லா மதங்களின் மத்தியிலும் நம்பிக்கையினை ஏற்படுத்துவதன் மூலமே அந்த நிலைமையினை உருவாக்கமுடியும்.
நாங்கள் இந்த நாட்டில் அனைத்து மக்களும் நியாயமான நிலையை உணரும் நிலைமையை ஏற்படுத்தவேண்டும். மக்களின் வறுமையினை ஏழ்மையினை இல்லாமல்செய்யவேண்டும்.அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வியை வழங்குவதன் மூலம் அவற்றினை செய்யமுடியும்.














