புதிய அரசுக்குள் புகுந்து கொடுமைகளை செய்ய மஹிந்த முயற்சி! பொன்.செல்வராசா எம்.பி எச்சரிக்கை (படங்கள்)
மகிந்த ராஜபக்ஸ புதிய அரசாங்கத்துக்குள் புகுந்து கொடுமைகளை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். அதனை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தின் காஞ்சிரங்குடா பிரதேசத்தின் தமிழரசுக்கட்சி கிளையின் கூட்டம் காஞ்சிரங்குடா சிவன் ஆலய முன்றலில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி தலைவர் க.கோபாலபிள்ளை உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இந்த நாட்டின் தமிழ் மக்கள் மனதில் புதிய அரசாங்கத்தினை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்காவிட்டால் இன்று இங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காது.
இன்று அரசாங்கத்தில் புதிய சட்டம் வந்துள்ளது.இனவாதிகளை இனங்காண வேண்டும் என்பதாகும். சட்டங்கள் உருவாக்கப்பட்டு அதன்மூலம் மதவாதிகளுக்கு தண்டனையும் வழங்கப்படவுள்ளது.
இனி இனவாதமோ, மதவாதமோ இந்த நாட்டில் பேசமுடியாது. சகோதரத்துவமான சமாதானமாக வாழக்கூடிய ஒரு சமுதாயத்தினை இந்த நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்று புதிய அரசாங்கம் கங்கணம் கட்டியிருக்கின்றது.
அந்த நிலையில் நாங்கள் வாழ்வதாக இருந்தால் அரசாங்கத்தில் இருந்து பெறக்கூடிய அனைத்து நன்மைகளையும் பெற முடியும்.
இந்த பிரதேசம் எல்லைப் பிரதேசம்.மற்றைய இனங்களின் ஊடுருவல் நிறைந்த பிரதேசமாகவுள்ளது. இங்கு இடம்பெற்ற அத்துமீறிய குடியேற்றங்களை தடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினை தவிர யாரும் முன்வரவில்லை.
இன்று மீள்குடியேற்றம் நடந்து கொண்டுள்ள நிலையில் மட்டக்களப்பில் சில பகுதிகளில் இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. இங்கு இராணுவ நடவடிக்கைகக்காக 1600 ஏக்கர் காணிகளை ராஜபக்ஸ அரசாங்கம் பறித்தெடுத்தது. முஸ்லிம் மக்களின் பள்ளிவாயல்கள் அழிக்கப்பட்டன. அதற்காக அந்த மக்கள் எடுத்த நடவடிக்கையே இவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இன்று அவர் மீண்டும் இந்த அரசாங்கத்துக்குள் புகுந்து மக்களை கொடுமைப்படுத்துவதற்காக கங்கணம் கட்டிக் கொண்டுள்ளார். அவர்கள் இந்த நாட்டின் சொத்துகளை எடுத்துச் சென்றவர்கள்.அவர்களை ஆட்சியதிகாரத்துக்குள் ஒருபோதும் மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். கொடுமைகள் பல புரிந்த தலைவரை நாங்கள் இவ்வாறு வீட்டுக்கு அனுப்பியுள்ளோம்.
நாங்கள் தற்போது நல்ல தலைவரை பெற்றிருந்தாலும் அவரின் அரசியல் நடவடிக்கைகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த அரசாங்கத்திலும் சிலவேளைகளில் கொடுமைகள் நடக்கலாம் இல்லையென்று சொல்வதற்கில்லை. கடந்த அரசாங்கத்தில் எமது இளைஞர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட நிலையில் அவர்களிடம் இருந்து தப்பிய சில இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு சென்று மீண்டும் தமது உறவுகளை பார்க்க வரும் வேளையில் விமான நிலையத்தில் கைதுசெய்யப்படும் நிலை உள்ளது.மட்டக்களப்பு இளைஞர்கள் 14 பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் காலத்தில் மட்டும் பல்வேறு கட்சிகளின் பெயரை கூறிக் கொண்டு வருவார்கள். 2006ஆண்டு இடம்பெயர்ந்து நீங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது உங்களுக்கு வழங்கப்படவிருந்த நிதிகள் வழங்கப்படவில்லை. அந்தப் பணம் எங்கு சென்றது என்று தெரியவில்லை.ஒரு பிரதேசத்துக்கு ஒரு நிலைமையே காணப்படுகின்றது. மீள்குடியேற்ற அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில ஒரு வீடு கூட அமைக்கப்படவில்லை.
ஆனால் அதேவேளையில் வெலிஓயா என்றழைக்கப்படுகின்ற சிங்களவர்கள் வாழும் பகுதியில் தமிழர்களும் வாழுந்த பகுதியில் சிங்களவர்களுக்கு ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.












