நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாதிருந்த யாழ்.ஊரெழு மேற்கு பொக்கணை வீதியின் புனரமைப்புப் பணி நிறைவு (படங்கள்)
நீண்ட காலமாகப் புனரமைக்கப்படாதிருந்த யாழ்.ஊரெழு மேற்குப் பொக்கணை வீதி வலி.கிழக்குப் பிரதேச சபையின் நிதி மூலம் புனரமைக்கப்பட்டுள்ளது.
அதிகளவான பொதுமக்கள் நாள்தோறும் பயன்படுத்துதம் இந்த வீதி கடந்த பல வருடங்களாகத் திருத்தப்படாத நிலையில் மிகவும் சேதமடைந்து காணப்பட்டது.
இதன் காரணமாக இந்த வீதியால் பயணிக்கும் பல்வேறு தரப்பினரும் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கினர்.
வீதியின் மோசமான நிலை தொடர்பாகவும், உடனடியாகப் புனரமைத்துத் தருமாறு கோரியும் கடந்த வருடம் செப்ரெம்பர் மாதம் பிரதேச மக்கள் சார்பாக ஊரெழு மேற்குச் சிவபூரணி முத்தமிழ் மன்ற அறநெறிப் பாடசாலையூடாக வலி.கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் குறித்த வீதியின் புனரமைப்பு வேலைகள் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டுத் தற்போது நிறைவு பெற்றுள்ளன. இந்த வீதி சபையின் சுமார் 85 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனால், இந்த வீதியால் பயணம் செய்யும் பல்வேறு தரப்பினரும் நன்மையடைந்துள்ளனர்.







