மட்டக்களப்பில் நடைபெற்ற சிவராம் நினைவு நாள்
சிரேஸ்ட ஊடகவியலாளர் தர்மரெத்தினம் சிவராமின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 29ஆம் திகதி புதன்கிழமை அவரது பிறந்த ஊரான மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் வடக்கு கிழக்கு தெற்கு மற்றும் மலையக ஊடக அமைப்புகளின் இணை ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந் நினைவேந்தல் நிகழ்வில், மௌன வணக்கத்துடன், மலரஞ்சலி, என்பவற்றுடன் நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டது.
சிவராமுடனான நாட்கள் என்ற தலைப்பில் வீரகேசரி குழுமத்தின் ஆலோசகர் வி.தேவராஜா, ஊடகங்களின் சுதந்திரம் என்ற தலைப்பில் சுதந்திர ஊடக இயக்கத்தின் அமைப்பாளர் சுனில் ஜெயசேகர , இனிய நண்பன் என்ற தலைப்பில் ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டு இயக்கத்தின் அமைப்பாளரும் லேக்ஹவுஸ் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளருமான சமன் வகவாராட்சி, தமிழ் அரசியல் போக்கும் ஊடகமும் என்ற தலைப்பில் புதியவன் நாளிதழ் ஆசிரியர் எஸ்.சிவகரன் ஆகியோர் உரையாற்றினர்.
ஊடகவியலாளன் சகலமும் அறிந்தவன்-சிவராமினுடைய கனவாகும் என்ற வகையில், தமிழ்ச் சமூகத்தில் ஊடகக் கல்வி வாய்ப்புகளும் சவால்களும் தலைப்பில் நிரைவுப் பேருரையினை கிழக்கு பல்கலைக்கழக திருமலை வளாக தொடர்பாடல் மற்றும் வணிகக் கற்கைகள் பீடத்தின் மொழிகள் மற்றும் தொடர்பாடல் துறையின் தொடர்பாடல் கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி சி.ரகுராம் நிகழ்த்தினார்.









