செய்திகள்

அரச ஊழியர்களின் ஓய்வு வயதெல்லை குறைப்பு சில நிறுவனங்களுக்கு பொருந்தாது!

அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும், தெரிவு செய்யப்பட்ட  சில அத்தியாவசிய துறைகளுக்கு இது  நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

மருத்துவம், தாதியர், பொறியியல் உள்ளிட்ட சில தொழில்களின் ஓய்வுபெறும் வயது எல்லை இதில் உள்ளடக்கப்படாது என அமைச்சின் செயலாளர் மாயாதுன்ன குறிப்பிட்டார்.

குறித்த தொழில்களில் ஈடுபடுபவர்கள் 63 வயது வரை பணியாற்றும் வகையில், அமைச்சரவையில் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என செயலாளர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பிலான  சுற்றறிக்கை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இதன் பிரகாரம், இந்த ஆண்டு இறுதியில் 20,000-இற்கும் அதிகமானவர்கள்  ஓய்வுபெறவுள்ளதாக  அவர் சுட்டிக்காட்டினார்.

-(3)