செய்திகள்

யுத்த காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை அமைதியாக நினைவேந்த முடியும் – பிரதமர்

தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிரு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த திலீபனின் 35 ஆவது ஆண்டு நிவைவேந்தல் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை வடக்கு – கிழக்கிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

யுத்த காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அவர்களை அமைதியாக நினைவேந்த முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் ஒவ்வொரு வருடமும் நினைவேந்தல் நிகழ்வுகள் வரும்போது இன ரீதியான, மொழி ரீதியான, மத ரீதியான கருத்து மோதல்கள் வெடிக்கின்றன எனவும் அந்த நிலைமை இனியும் தொடரக்கூடாது என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவுள்ளார் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நினைவேந்தல்களை இறந்தவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அமைதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.அந்த நிகழ்வுகள் அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளதாகவோ அல்லது இன ரீதியான கிளர்ச்சியைத் தூண்டுபவையாகவோ இருக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் கொடிகளைப் பயன்படுத்தியோ அல்லது அந்த அமைப்புக்களுக்கு புகழாரம் சூட்டியோ நினைவேந்தல் நிகழ்வுகளைக் கடைப்பிடிக்க முடியாது எனவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.அவற்றை மீறினால் சட்டங்களுக்கமைவாகவே நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.(15)