செய்திகள்

அரிசி தொடர்பில் வெளியான செய்தி தொடர்பில் அரசாங்கம் அவதானம்!

நச்சு பதார்த்தங்கள் கலந்த உணவு எமது நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ஒரு சில ஊடகங்கள் வாயிலாக செய்தி வெளியிடப்பட்டமை தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ள தன்மை மற்றும் உள்ளடக்கத்தைக் கருத்தில் கொள்ளும் போது தெரியவருவதாவது, அச்செய்தியை அடிப்படையாகக் கொண்டு மக்களைத் திசை திருப்புவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த செய்தி அறிக்கையின் செய்திப் பெறுமதிகொண்ட பகுதியாக அமைவது, ´எமது நாட்டு மக்களின் பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் உலோக வகைகள் அதிகமாகக் காணப்படுவது சிறுநீரக நோய், புற்றுநோய், எடை குறைந்த பிள்ளைகள் பிறத்தல் போன்ற பல நோய்களுக்கு ஏதுவாக இருப்பதாகவும், எமது நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட அரிசியில் ஈயம் 43% வீதமும், கட்மியம் 26% வீதமும், பாதரசம் 20% வீதமும் மற்றும் செலனியம் நச்சுப்பதார்த்தம் 47% வீதமும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.´

இது தொடர்பாக பொறுப்புமிக்கவர்களாக எமது பதிலளிப்புக்களாக அமைவது :

1) இச்செய்தி அறிக்கைக்காக பயன்படுத்தப்பட்டது 2017 ஆண்டில் கண்டியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் அறிக்கையென பதில் கிருமி நாசினி பதிவாளர் லசந்த ரத்னவீர அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.

2) பொதுவாக பத்து இலட்சம் பங்குகளுக்கு ஒரு பங்காகவே உலோகங்கள் அளவீடு செய்யப்படும். ஆனாலும், ஊடகங்களில் நூறின் பங்காகவே குறிப்பிடப்பட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு நூறின் பங்குகளாக அளவிடும் முறை உலகில் இல்லையெனவும், அதற்கமைய மேற்படி செய்தி உண்மைக்குப் புறம்பானது எனவும் திரு. லசந்த ரத்னவீர மேலும் தெரிவிக்கின்றார்.

3) இலங்கை வரலாற்றில் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து அதிலிருந்து மீண்டெழும் முயற்சியில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்ற இவ்வேளையில், நாட்டை சீர்குலையச் செய்யும் சக்திகள் இவ்வாறான உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புவதற்கு இடமளிக்க முடியாததாகும். அதனால், பொறுப்புவாய்ந்த ஊடக நிறுவனங்கள் என்ற வகையில் தெரிந்தோ தெரியாமலோ அவ்வாறான செய்திகளுக்கு ஒத்துழைக்கமாட்டீர்கள் என்பதே அரசாங்கத்தின் நம்பிக்கையாகும்.

4) தகவல்களை மக்கள் அறிந்து கொள்வதற்கான உரிமை கொள்கையாக மாத்திரமல்ல, சட்டமாகவும் நிறைவேற்றப்பட்டுள்ள பின்னணியில், இவ்வாறான கூருணர்வு மிக்க விடயங்களை செய்திகளாக வெளியிடும் போது குறித்த தரப்பினர்களுடன் சரியாகக் கேட்டறிந்து, உண்மையான தகவல்களை சரியான தகவல் மூலங்களுடன் மக்கள் மயப்படுத்தும் ஊடக சுதந்திரத்திற்கு மதிப்பளித்து, இவ்வாறான தெளிவுபடுத்தல்களுக்கு முன ;னுரிமை வழங்கி தேவையான அவகாசம் வழங்குமாறு தங்களுடைய ஊடக நிறுவனத்திடம் தயவுடன் எதிர்பார்க்கின்றோம்.

-(3)