யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் நலச்சேவைகளுக்கென சீனத் தூதரகத்தினால் 43 இலட்சம் ரூபாய் நிதியுதவி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் நலச்சேவைகளுக்கென சீனத் தூதரகத்தினால் 43 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.சீனத் தூதரகத்தின் இந்த நிதியுதவியின் கீழ் மாணவர்களுக்கான மாதந்த உதவிப்பணம் உட்பட பல நலனோம்புச் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று பல்கலைக்கழக நலச்சேவைகள் பிரிவு அறிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீனத் தூதுவரின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் நிதியுதவி பங்கிட்டு வழங்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும், கிழக்கு பல்கலைக்கழகத்துக்கும் மட்டுமே முழுத் தொகையும் பங்கிட்டு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதியுதவி நேற்று பிற்பகல் கொழும்பிலுள்ள சீனத்தூதரகத்தில் வைத்து இலங்கைக்கான சீனத் தூதுவர் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவிடம் கையளித்தார்.இந்த நிகழ்வில் சீனத்தூதுவரின் முதற் செயலாளர் லீ ஜிங்ரே, யாழ். பல்கலைக்கழக மாணவர் நலச் சேவைகள் பணிப்பாளர் கலாநிதி சி.ராஜ்உமேஸ், சீனத்தூதுவர் நிதியுதவிக்கான யாழ். பல்கலைக்கழக இணைப்பாளர் கலாநிதி மு.தணிகைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.(15)




