செய்திகள்

யாழ்ப்பாணத்தில் போலி வங்கி ஆவணங்களைப் பயன்படுத்தி 120 மில்லியன் ரூபாய் மோசடி – இரு சகோதரிகள்கைது

போலி வங்கி ஆவணங்களைப் பயன்படுத்தி 120 மில்லியன் ரூபாயை மோசடி செய்த இரு சகோதரிகள் யாழ்ப்பாணத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சகோதரிகள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் டிசெம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் பல்வேறு அரச அதிகாரிகள், வங்கி முகாமையாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் கிராம அலுவலகர்களால் கையொப்பமிடப்பட்ட கடிதங்கள் உட்பட ஏராளமான போலி ஆவணங்களை வைத்திருந்தனர்.வங்கி புத்தகங்கள் மற்றும் வங்கி பற்றுச்சீட்டுகளும் அவர்களிடம் இருந்தன. இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தேக நபர்கள் 30 மற்றும் 34 வயதுடைய யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.இவர்கள் இருவரும் நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரை 2021 ஜனவரி முதல் ஜூன் வரை 23 வங்கிக் கணக்குகள் மூலம் 120 மில்லியன் ரூபாயைப் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இறந்த தங்கள் தந்தை ஒரு பணக்கார தொழிலதிபர் என்றும் அவருக்கு ஒரு பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தங்க நகைகள் உட்பட பண சொத்துக்கள் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

நிதியை விடுவிப்பதற்கான சட்டச் சிக்கல்களைத் தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் கூறியிருந்தனர். இருவரும் தன்னை ஏமாற்றி வந்ததை நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் உணர்ந்துள்ளார்.அவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் சகோதரிகள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.(15)