செய்திகள்

கோட்டாபய மற்றும் மஹிந்த கனடாவிற்குள் பிரவேசிக்க தடை – கனேடிய உயர்ஸ்தானிகருக்கு வெளிவிவகார அமைச்சு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி உள்ளிட்டவர்கள் கனடாவிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

1983 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கனடாவின் வெளிவிவகார அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் மனித உரிமை மீறல்களைச் செய்தவர்கள் தொடர்ந்தும் தண்டனையில் இருந்து தப்பிப்பதை கனடா ஒருபோதும் ஏற்காது என்ற செய்தியை இந்தத் தடைகள் எடுத்து காட்டுவதாக கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி குறிப்பிட்டுள்ளார்.

1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன் பொறுப்புக்கூறல் தொடர்பில் கனடா மற்றும் சர்வதேச சமூகம் தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கம் தனது மனித உரிமைக் கடமைகளை நிலைநிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பில் விளக்கம் கோருவதற்காக கனேடிய உயர்ஸ்தானிகர் வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.இன்று புதன்கிழமை காலை இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(15)