செய்திகள்

இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த இந்திய அரசாங்கத்தினால் பேருந்துகள் அன்பளிப்பு

இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு 50 பேருந்துகள் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.இதற்கான ஆவணங்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே, ஜனாதிபதியிடம் கையளிதிருந்தார்.

குறித்த நிகழ்வில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, பாராளுமன்ற உறுப்பினர்களான ராதிகா விக்ரமசிங்க, முதிதா பிரஷாந்தி மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தலைவர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இந்திய அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, 75 ஆவது தேசிய சுதந்திர கொண்டாட்டத்துடன் இணைந்ததாக, இந்தப் பேருந்துகளை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை அதன் முதல் தொகுதியாக 75 பேருந்துகள் அண்மையில் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.மேலும் 40 பேருந்துகளின் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதன்படி, இலங்கைக்கு இதுவரை 165 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளதுடன், 500 பேருந்துகள் வழங்கும் திட்டம் 2023 மார்ச் மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(15)