மூடப்பட்டதால் விசனம்! வீதியை விளையாட்டு மைதானம் ஆக்கிய வீரர்கள் (படங்கள்)
விளையாட்டு வீரர்களுக்காக அமைக்கப்பட்ட டன்பார் பொது விளையாட்டு மைதானம் மூன்று மாதத்திற்கு மூடப்பட்டுள்ளதால் மைதானத்தை உடனடியாக திறக்கும் படி கோரி அட்டன் விளையாட்டுதுறை பயிற்சியார்கள் உட்பட அட்டன் நகரவாசிகள், விளையாட்டு இளைஞர்கள் ஆகியோர் மைதானத்திற்கு முன்பு 09.05.2015 அன்று காலை 8 மணியளவில் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின்னர் விளையாட்டு மைதானத்தின் நிலைமையை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு கொண்டு வரும் வகையில் மைதானம் மூடப்பட்டுள்ளதன் காரணத்தினால் அட்டன் நகர மணிகூட்டு கோபுரத்திற்கு முன்னால் பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவாறே விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டனர்.
அத்தோடு மைதானத்தை வியாபாரமாக்காதீர் ரூபா 5500 அதிகமில்லையா?, அரசியலுக்கு பொது மைதானத்தை அடகு வைக்காதே, நகர பிதாவுக்கு மட்டுமா மைதானம், பொது மைதானம் பொது மக்களுக்கு இல்லையா? என பாதாதைகளை ஏந்தியாவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
01.05.2015 அன்று முதல் 01.08.2015 அன்று வரை மைதானம் மூடப்பட்டுள்ளதாக அறிவித்தல் பலகை மைதானத்தின் நுழைவாயில் மாட்டப்பட்டுள்ளது.
இதனால் எங்களது பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல் வேறு பல தூரங்களில் உள்ள வசதிவாய்ப்பு இல்லாத மைதானங்களுக்கு சென்று பயிற்சிகளை மேற்கொள்கின்றோம்.
முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக பல கோடி ரூபா செலவழித்து இந்த மைதானத்தை அபிவிருத்தி செய்து கொடுத்தார்.
அபிவிருத்தி செய்து கொடுத்து 5 வருடங்கள் ஆகின்றன. 5 வருடங்களில் அட்டன் டிக்கோயா நகர சபை தலைவரால் திடீர் திடீரென மைதானம் மூடப்படுகின்றது. முன்னர் 24 மணித்தியாலயமும் திறந்து காணப்படும் தற்போது மூடப்பட்டே காணப்படுகின்றது.
அத்தோடு அட்டன் டிக்கோயா நகர சபை தலைவரும் அவருடைய நண்பர்கள் மட்டும் பயிற்சிகளில் ஈடுபட்டு செல்கின்றார்கள். இது ஒரு நியாயமற்ற செயலாகும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பந்தமாக அட்டன் டிக்கோயா நகரசபை தலைவர் அழகமுத்து நந்தகுமாரவிடம் தொடர்பு கொண்டு வினாவிய போது,
மைதானத்தில் அத்தியவசிய புனர் நிர்மாண நடவடிக்கைகள் காரணமாகவே மூடப்பட்டுள்ளது. மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவின் அனுமதியை பெற்று தான் இவ்வாறு மூடப்பட்டுள்ளது. திருத்தப் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.
எனினும் மூன்று மாதத்திற்கு மைதானம் மூடப்படவிருந்தாலும் ஒரு மாதத்திற்குள் பணிகளை முடிவடைத்து திறக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=JPFXr4wmn5A” width=”500″ height=”300″]




















