செய்திகள்

துருக்கி நிலநடுக்கம்: 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 500 பேருக்கு மேல் பலியானதாக தகவல்

சிரிய எல்லைக்கு அருகில் தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் இடிபாடுகளுக்கு நடுவே சிக்கியுள்ளனர்.7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாணங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை.துருக்கியில் அதிகாரிகள் இதுவரை 76க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை உறுதி செய்துள்ளனர். தியார்பாகிர் உட்பட 10 நகரங்கள் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.சிரியாவில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அடுத்த சில மணிநேரங்களில் பலி எண்ணிக்கை கடுமையாக உயரும் என அஞ்சப்படுகிறது.

பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. பெரும் இடிபாடுகளுக்கு நடுவில் உயிர் பிழைத்திருப்பவர்களைத் தேடுவதற்கு மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.காசியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், உஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர், கிலிஸ் ஆகிய 10 நகரங்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாக துருக்கியின் உள்துறை அமைச்சர் சுலேமான் சோய்லு தெரிவித்தார்.

காசியான்டெப்பின் வடகிழக்கில் உள்ள மாலத்யா மாகாணத்தில் குறைந்தது 23 பேர் பலியானதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். கிழக்குப் பகுதியிலுள்ள சான்லியுர்ஃபாவில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தியர்பாகிர், ஓஸ்மானியே ஆகிய பகுதிகளில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ, லதாகியா, ஹமா மற்றும் டார்டஸ் ஆகிய மாகாணங்களில் – 237 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 600க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

துருக்கியில் 284 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2,323 காயமடைந்துள்ளதாக துருக்கி துணை அதிபர் தெரிவித்துள்ளார்.துருக்கி, சிரியா இரு நாடுகளில் மொத்தமாக நிலநடுக்கத்தால் இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது துருக்கியின் வரலாற்றில் மிகப்பெரிய நிலநடுக்கமாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.(15)