இரகசியமாக வந்து சென்ற அமெரிக்க அதிகாரிகள் யார்?
அமெரிக்க விமானப் படைக்கு சொந்தமான இரண்டு விசேட விமானங்களில்கடந்த 14 ஆம் திகதி இரவு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டிற்கு வந்தவர்கள் நேற்று பிற்பகல் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
விமானத்தில் வந்தவர்கள் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்திடம் வினவியபோதிலும், அது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க தூதரகம் மறுத்துவிட்டதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிரேக்கத்தின் அமெரிக்க விமானப் படை முகாமொன்றிலிருந்து இரண்டு விசேட விமானங்களும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் ஒரு விமானம் மாலை 6.58 மணிக்கு இலங்கைக்கு வந்துள்ளதுடன், மற்றைய விமானம் 7.10 மணிக்கு விமான நிலையத்தை அடைந்துள்ளது.
இந்த விமானங்கள் C-17 Globe Masters ரக விமானங்களாகும். இவை யுத்த உபகரணங்களைக் கொண்டு போக்குவரத்து செய்யும் மிகப்பெரிய சரக்கு விமானங்களாகும்.
உயர்மட்ட இராஜதந்திரிகள் உள்ளிட்ட 29 பேர் இந்த இரண்டு விமானங்களிலும் நாட்டிற்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.
அமெரிக்க ஐக்கிய இராச்சியத்தின் இந்து பசுபிக் பாதுகாப்பு விடயத்திற்கு பொறுப்பான தலைமை பிரதி உதவி பாதுகாப்பு செயலாளர் Jedidiah Royal உள்ளிட்ட பிரதிநிதிகள் வருகை தந்துள்ளதாக Daily Mirror செய்தி வௌியிட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த இரண்டு விமானங்களும் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளன.
-(3)




