திருகோணமலை கடற்பரப்பில் தார் போன்ற திரவத்தால் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு
திருகோணமலை கடற்பரப்பில் தார் போன்ற திரவ படலம் மிதப்பதன் காரணமாக கடற்றொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருகோணமலை உப்புவௌி தொடக்கம் நிலாவௌி வரையான கடற்பரப்பில் தார் போன்ற திரவ படலம் காணப்பட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்தது.
சேகரிக்கப்பட்ட மாதிரிகள் கொழும்பிலுள்ள விசேட ஆய்வுக்கூட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அதிகார சபை தெரிவித்தது.
திருகோணமலை கடலை அண்மித்த பகுதியில் பயணித்த கப்பலில் இருந்து கறுப்புத் துகள்கள் வெளியேறியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலை சோதனையிட்டதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டது.
கப்பலில் இருந்தும் சில மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாக அதிகார சபை கூறியது.
கப்பலில் இருந்து கழிவுகள் வெளியேறியிருந்தால், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியது.
இதேவேளை, திருகோணமலை மற்றும் அதனை சூழவுள்ள கடற்பரப்பை சுத்தப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
-(3)




