செய்திகள்

”வங்குரோத்து நிலையில் இருந்து நாடு மீண்டுவிடும்”

வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் அனைவரும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு மாத்திரமின்றி எதிர்காலத்தில் போட்டித்தன்மை மிக்கதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவற்கும் கடன் நீடிப்பு வேலைத்திட்டம் மிகவும் அவசியமானதென ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்த முயற்சிகளின் பலனாக எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் வங்குரோத்து நிலையிலிருந்து நாடு மீண்டு விடும் என நம்பிக்கை தெரிவித்துள்ள ஜனாதிபதி, அதற்கான வேலைத்திட்டங்களுடன் அனைவரும் ஒன்றுபட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை பணிப்பாளர் சபையுடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

கடன் நீடிப்பு முயற்சிகளை வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அது குறித்து அமைச்சரவை, வங்கியாளர்கள், வணிக சபை உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

காலநிலை சுபீட்சத்திற்கான வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த போதியளவு வளங்கள் இல்லை என்பதால், ஒரு தொகுதி வளங்களை அரசாங்கம் வழங்கவுள்ள நிலையில், மிகுதி வளங்களை தனியாரிடத்தில் இருந்து பெற்றுக்கொள்ளவே அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தவறும் பட்சத்தில், உலக வங்கியிடமிருந்து கிடைக்கவிருக்கும் 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்துடனான இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியடையலாமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் இலங்கையினால் கடன் நிலைத்தகு தன்மை மற்றும் காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான விடயங்களில் அதிகளவிலான சாத்தியப்பாடுகளை காண முடியும் என அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

தென்கிழக்கு மற்றும் கிழக்காசிய வர்த்தக கூட்டமைப்பில் இணைவதற்கான விண்ணப்பத்தை எதிர்வரும் நாட்களில் சமர்பிக்கவுள்ளதுடன், இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐரோப்பிய சங்கத்துடன் வர்த்தக தொடர்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ள நிலையில், அதுவே இலங்கையின் போட்டித்தன்மை மிக்க பொருளாதாரத்தை கட்டமைப்பதற்கான ஆரம்ப புள்ளியாக அமையுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

-(3)