செய்திகள்

காசல்ரி நீர்தேக்கப் பகுதியில் தீ வைப்பு

நாட்டின் மின் உற்பத்திக்கு பாரிய அளவில் பங்களிப்பு செய்யும் காசல்ரி நீர்தேக்கப் பகுதியில் இனந்தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த தீ வைப்பு சம்பவம் இன்று (21) 1.45 மணியளவில் காசல்ரி நீர்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு சமீபமாக வனப்பாதுகாப்பு பகுதியில் இடம் பெற்றுள்ளது.

இந்த தீ பரவல் காரணமாக சுமார் 02 ஏக்கர் வரை எரிந்து நாசமாகியிருப்பதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.

இதனால் அரிய வகை தாவரங்கள் நீரூற்றுக்கள், மற்றும் சிறிய உயிரினங்கள் ஆகியன அழிந்து போயிருக்கலாம் எனவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

தீயினை கட்டுப்படுத்துவதற்கு மின்சார சபையின் ஊழியர்கள், மற்றும் இரானுவ அதிகாரிகள் பிரதேச வாசிகள் இணைந்து தீயினை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்பு பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான கால நிலையினை தொடர்ந்து நீரேந்து பிரதேசங்களிலும் வறட்சி நிலவி வருகின்றன இதனால் காசல்ரி மௌசாக்கலை, உள்ளிட்ட பிரதான நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்து வருகின்றன.

இந் நிலையில் நீர் போசன பிரதேசங்களில் உள்ள காடுகளுக்கு தீ வைப்பதனால் நீரூற்றுக்கள் அற்றுப்போய்,குடிப்பதற்கும் குளிப்பதற்கும் நீர் பற்றாக்குறை நிலவக்கூடும் என்றும் இதனால் நீர் மின் உற்பத்திக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் பலர் சுட்டிக் காட்டுகின்றனர்.

எனவே வனப்பிரதேசங்களுக்கு தீ வைப்பதனை உடன் நிறுத்துமாறு சூழல் பாதுகாப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-(3)