செய்திகள்

கொக்குத் தொடுவாய் புதைகுழி அகழ்வுப் பணி நிறுத்தப்படும் நிலை

கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்  பணிகள்  நிறுத்தப்படும் சூழல்  காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை  சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் இன்றைய தினம்  எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலுள்ள பிரதான கணக்காளர், அகழ்வுப்  பணிகளை மேற்கொள்வதற்கு  நிதி இல்லை என நேற்றையதினம் (04) கூறியுள்ளார்.

இதனால்  அகழ்வு பணிகள் நிறுத்தப்படக்கூடிய சூழல் காணப்படுவதோடு, உடற்கூற்று பரிசோதனை முடிவுகளும்  தாமதமாகக் கிடைக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்டெம்பர்  மாதம்(06) ஆரம்பிக்கப்பட்டு 15 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது  17 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டிருந்தன. இந்நிலையில் குறித்த அகழ்வுப்பணியானது இடைநிறுத்தி வைக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் மூன்றாம் வாரமளவில் இதே குழுவினரால் மீள ஆரம்பிக்கப்படும் என முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி  ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

-(3)