செய்திகள்

ஐஎம்எப் நிதி – மேலும் இரு விடயங்களை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டும்!

ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நிதிவசதி திட்டத்தின் கீழ் இரண்டாவது தவணை பணத்தை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் இன்னும் இரண்டு விடயங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்தார்.

மேலும், இலங்கையின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகள் பாராட்டத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார்.

வொசிங்டனில் நேற்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் மதிப்பாய்வை நிறைவு செய்வதற்கு இரண்டு விடயங்கள் அவசியம்.

அரசாங்கத்தினால் ஒப்புக்கொள்ளப்பட்ட முன் நடவடிக்கைகளை செயற்படுத்தல். இரண்டாவது நிதி உத்தரவாதங்களின் மதிப்பாய்வை நிறைவு செய்தல் என்பதாகும்.

இலங்கையின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகள் பாராட்டத்தக்கவை

விரைவான பணவீக்க வீழ்ச்சி மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இதனை அவதானித்துள்ளோம்.

இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் பலனளிக்கத் தொடங்கியுள்ளன.

அத்துடன் அரசாங்கத்தின் நிதி அமைப்பில் ஸ்திரத்தன்மையையும் பாதுகாக்கிறது.

ஒட்டுமொத்த நிரல் செயல்திறன் வலுவாக உள்ளது. நான்காண்டு கால திட்டத்தில் ஐஎம்எப் அதிகாரிகளுக்கும் இலங்கை அதிகாரிகளும் இடையிலான பொருளாதாரக் கொள்கைகள் பணியாளர் அளவிலான மட்டத்தில் உடன்பாட்டை எட்டியுள்ளனர்.

இந்த உடன்படிக்கைகள் நிறைவடைந்தால் இலங்கைக்கு சுமார் 337 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி கிடைக்கும்.

கடன் மறுசீரமைப்பைப் பொறுத்தமட்டில், வெளிநாட்டு தனியார் கடனாளிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன.

இலங்கையின் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் கொள்கையளவில் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுகின்றது.

உள்நாட்டு கடன் நடவடிக்கைகள் பெரும்பாலும் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

 

வெளிநாட்டுப் பத்திரதாரர்களுடனான ஆரம்ப கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தம் ஏதுமின்றி ஏப்ரல் நடுப்பகுதியில் நிறைவடைந்துள்ளன.

 

மேலும் கொள்கைகள் மற்றும் உத்தியோகபூர்வ கடன் வழங்குனர் தரப்பில் இந்த ஒப்பந்தங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

தொடர்ந்து விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன” என சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.

-(3)