uzpரணில் – அனுர கூட்டணி அமைக்க முயற்சி – குற்றஞ்சாட்டும் சஜித்!
தற்போதைய ஜனாதிபதி, தன்னை தோல்வியடையச் செய்து அநுரகுமாரவை வெற்றியடைய செய்வதற்கு வித்தியாசமான கூட்டமைப்பு ஒன்றைஏற்படுத்தியுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் நேற்று இடம்பெற்ற 43 ஆவது மக்கள் வெற்றி பேரணியில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ரணிலும் அநுரவும் சிறந்த அரசியல் டீல் ஒன்றை செய்திருக்கின்றனர். அவர்களுடைய டீல் தொடர்பில் எனக்கு பிரச்சினை இல்லை. எனக்கு 220 இலட்சம் மக்களுடனே டீல் இருக்கின்றது. இந்த மக்கள் வீழ்ந்துள்ள இடத்திலிருந்து மீட்டெடுப்பதே எதிர்பார்ப்பு.
சோசலிசம் குறித்து கதைக்கின்ற அநுகுமார, ரணில் விக்ரமசிங்க உடன் டீல் செய்திருக்கின்றார். இவர்கள் நாட்டை கட்டியெழுப்பாமல் அவர்களின் முன்னேற்றத்திற்காகவே டீல் செய்திருக்கின்றார்கள்.
அவர்கள் இருவருக்கும் ஜனாதிபதி பிரதமர் பதவிகளை பிரித்து கொண்டு இருக்கின்றார்களா என்கின்ற சந்தேகமும் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு அதிகபட்ச தண்டனை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பொறுப்புக் கூற வேண்டிய தீவிரவாதிகளுக்கும், மிலேச்சத்தனமான சூத்திரதாரிகளுக்கும் சட்டத்தின் முன் நிறுத்தி வழங்கப்பட வேண்டிய அதிகபட்ச தண்டனையை வழங்குவோம்.
சஜித் பிரேமதாச என்பவர் பணத்திற்காகவும், பதவிகளுக்காகவும், வரங்களுக்காகவும் விலை போகின்றவர் அல்ல. 220 இலட்சம் மக்களின் நம்பிக்கையை வென்றவராக ஆத்ம கௌரவத்தை பாதுகாத்து செயல்படுகின்ற ஒருவராவார்.
எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தை ஆராய்ந்து அதனை வெளிப்படுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த சந்தர்ப்பத்தில் வாக்குறுதியளித்தார்.
-(3)




