செய்திகள்

இறுதி தீர்வு சர்வஜன வாக்கெடுப்பினூடாகவே தீர்மானிக்கப்படவேண்டும்: தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்து

இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச ரீதியான ஒரு சர்வஜன வாக்கெடுப்பை வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடத்த வேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணி 2024 ஆம் ஆண்டுக்கான தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் தலைமையில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இலங்கையில் எத்தகைய ஒரு தீர்வு தமக்கு வேண்டும் என்பதை தமிழ் மக்கள் தீர்மானிக்கும் வகையில் சர்வதேச சமூகம் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்த விஞ்ஞாபனம் அத்தகைய ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றபோது இருக்கக்கூடிய பல தெரிவுகளில் தமிழ் மக்கள் கூட்டணி வலியுறுத்திவரும் ‘கூட்டு சமஷ்டி’ அடிப்படையிலான தீர்வும் ஒரு ஒரு தெரிவாக இருக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது.

இறுதி தீர்வு சர்வதேச ரீதியான சர்வஜன வாக்கெடுப்பொன்றின் ஊடாக தீர்மானிக்கப்படவேண்டும் என்றும் கூட்டு சமஷ்டி அடிப்படையிலான தெரிவின் அடிப்படையிலேயே தீர்வு அமையவேண்டும் என்பதும் தமிழ் மக்கள் கூட்டணியின் நிலைப்பாடு என்றும் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் குறிப்பிடப்பட்டிருந்தமை கவனிக்கத்தக்கது. கட்சியின் இந்த நிலைப்பாட்டினை கட்சியின் தலைவர் நீதியரசர் சி. வி விக்னேஸ்வரன் கடந்த 4 வருடங்களாக பாராளுமன்றத்திலும் சர்வதேசமாட்டங்களிலும் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவளை, இம்முறை தேர்தலில் யாழ் மாவட்டத்தில் மட்டும் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணி, அரசியல் அனுபவம் மிக்க இளையோர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் ஆளுமையுள்ள பெண்களை கொண்ட அணி ஒன்றை வேட்பாளர்களாக முன்னிறுத்தியுள்ளமை பலரதும் வரவேற்பை பெற்றுள்ளது.