மட்டக்களப்பில் ஜோசப்வாசஸ் அடிகளார் நினைவுகூரப்பட்டார்
இலங்கையின் பல பாகங்களிலும் கல்விப்பணி மற்றும் கத்தோலிக்க மத வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி மட்டக்களப்பில் கடமையாற்றியபோது புனிதர் என்ற பட்டத்தினைப்பெற்ற ஜோசப்வாசஸ் அடிகளாரின் புனிதராக திருநிலைப்படுத்தப்பட்ட நாள் நினைவுகூரப்பட்டது.
மட்டகளப்பில் ஜோசப்வாஸ் பாடசாலையினை உருவாக்கி கல்விப்பணியாற்றிவந்ததுடன் மட்டக்களப்பில் கத்தோலிக்க வளர்ச்சிக்கும் அவர் அரும்பணியாற்றியுள்ளார்.
அவர் புனிதராக திருநிலைப்படுத்தப்பட்ட தினத்தினை நினைவுகூர்ந்து இன்று காலை மட்டக்களப்பு புனித காணிக்கை மாதா ஆலயத்தில் இருந்து மாபெரும் பேரணி நடைபெற்றது.
இப்பேரணியானது மட்டக்களப்பு திருமலை வீதியூடாக சென்று வெள்ளப்பாலத்தின் ஊடாக தாண்டவன்வெளி புனித ஜோசப் வித்தியாலயத்தினை வந்தடைந்தது.
அதனைத்தொடர்ந்து பாடசாலையில் விசேட திருப்பலி பூஜை நடைபெற்றது.மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் இந்த திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா உட்பட அருட்தந்தைகள்,அருட்சகோதரிகள்,மாணவர்கள்,ஆசிரியர்கள் பெற்றோர் கலந்துகொண்ட னர்.












