காணிகளை விடுவிக்க கோரி 5ஆவது நாளாகவும் போராட்டம்
தமது உரிமைக் காணி தொடர்பில் இன்றுடன் ஐந்தாவது நாளாக கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டிருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம், வலிக்காமல் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் மக்களோடு மக்களாக போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
காணிகளை விடுவிக்க கோரி கடந்த சனிக்கிழமை மயிலிட்டி சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் இன்றும் 500இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு உணவு சமைத்து அவ்விடத்தை விட்டு நகராமல் அமைதி வழியில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த போராட்டத்தில் மயிலிட்டி, பலாலி, அன்ரனிபுரம், காங்கேசன்துறை உள்ளிட்டவர்களும் கத்தோலிக்க மதகுருமார்களும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் பொது அமைப்புகள் உட்பட மலையக மக்கள் சார் பொது அமைப்புக்களைச் சேர்ந்த சிலரும் காணி விடுவிப்பைக் கோரி கவனயீர்ப்பை முன்னெடுத்தனர்.
1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து போன மக்கள் யுத்தம் நிறைவடைந்து தமது காணிகளுக்கு வந்த பின்னரும் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் காணிகளை விடுவிப்பதாக கூறி சிறு சிறு இடங்களை மாத்திரம் விடுவித்துள்ளன.
ஆனால் மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. இதனால் வாடகை வீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் முகாம்களிலும் இன்றுவரையும் காணி சொந்தக்காரர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக காணிகள் வைத்திருப்பதாக கூறுகின்ற இராணுவம் தற்போது மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகிய நிலையிலும் அவர்களின் காணிகள் விடுவிக்கப்படாமல் வைத்திருப்பது மக்கள் தொடர்ந்தும் அகதிகளாகவே வாழும் நிலைக்கு உட்படுத்துவதாகவே தாம் உணர்வதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
எனவே தமிழ் மக்கள் மத்தியில் அதிக அக்கறை கொண்டுள்ளோம் எனக் கூறுகிற புதிய அரசாங்கம் இதற்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் வரையில் குறித்த போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.




