செய்திகள்
”வடக்கு கிழக்கின் இன பரம்பலை மாற்றும் திட்டமிட்ட செயற்பாடுகளை கண்டிக்கின்றோம்”
வடக்கு கிழக்கின் இன பரம்பலை மாற்றும் நோக்குடன் திட்டமிட்ட முறையில் அரசினால் மேற்கொள்ளப்படும் குடியேற்றங்களை எதிர்க்கின்றோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டம் மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது கஜேந்திரகுமார் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,
வடக்கின் குறிப்பாக மன்னாரின் விவசாயம் நீர்ப்பாசனம் போன்றவற்றை அபிவிருத்தி செய்கிறோம் என்கின்ற பெயரில் நடைமுறைப்படுத்த இருக்கும் திட்டம் இந்தத் திட்டத்தை முதலில் முன்மொழிந்தது கோத்தாபாய ராஜபக்சே அரசாங்கம் ஆகும்.
இந்த மல்வத்து ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தில் உண்மையில் ஆக பதினைந்தே பதினைந்து முஸ்லிம் குடும்பங்கள் மட்டுமே( இந்த நீர்ப்பாசன திட்டத்தில் அவர்களின் வாழ்விடங்கள் நீரில் மூழ்குவதால்) பாதிக்கப்படக்கூடிய சந்தர்ப்பம் இருந்த நிலையில் , கோத்தாபாய் அரசாங்கம் அனுராதபுரத்தில் இருக்கின்ற 1500 சிங்கள குடும்பங்கள் இந்த நீர்ப்பாசன திட்டத்தினால் தமது வாழ்வை இழப்பார்கள் எனக் கூறி, அவர்களை வவுனியா தெற்கு செட்டிகுளம் பகுதியில் குடியமர்த்த முயன்றிருந்தது. அந்த நேரத்திலேயே இந்த நாங்கள் கடுமையாக எதிர்த்திருந்தோம்.
இப்போது அந்தத் திட்டத்தை JVP அரசு கையில் எடுத்திருக்கிறது.
இதற்கு 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
தமிழர்கள் ஒருபோதும் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல சிங்கள மக்கள் தாமாக விரும்பி வடக்கு கிழக்கில் வந்து குடியேறி, அந்த மண்ணின் மக்களோடு இயைந்து , தமது சுய விருப்பில் சுய உழைப்பில் வாழ விரும்பின் , அதை நாம் ஒருபோதும் எதிர்க்கப் போவதில்லை .
நாம் எதிர்ப்பதெல்லாம், வடக்கு கிழக்கின் இன பரம்பரை மாற்றும் நோக்குடன் திட்டமிட்ட முறையில் அரசினால் (அரசின் உதவியுடன்) மேற்கொள்ளப்படும் குடியேற்றங்களையே என்றார்.




