30 அடி பள்ளத்தில் பாய்ந்து பஸ் விபத்துக்குள்ளானதில் 11 பேர் படுகாயம் (படங்கள்)
அட்டனிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று 18.05.2015 அன்று காலை 5.30 மணியளவில் அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை கலுகல பகுதியில் பிரதான வீதியை விலகி 30 அடி பள்ளத்தில் பாய்ந்து ஒரு வீட்டின் கொங்கிறீட் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த சாரதி உட்பட 11 பேர் படுகாயமடைந்து அதில் 2 பேர் கிதுல்கலை தெலிகம வைத்தியசாலையிலும் 9 பேர் கினிகத்தேனை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்ட பின்னர் கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோரில் மேலதிக சிகிச்சைக்காக 4 பேர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் சாரதி பஸ்ஸின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணத்தினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






















