மஹிந்த யுகம் ஏற்படுவதை அனுமதியோம்: பொன்.செல்வராசா
இந்த நாட்டில் மகிந்த யுகம் ஒன்று ஏற்படுவதை சிறுபான்மை சமூகம் ஒரு போதும் அனுமதிக்காது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவின் தலைலைமையில் இயங்கும் ஆட்சியை ஏற்படுத்தாவிட்டால் தமிழ் மக்கள் இருக்கின்றதையும் இழக்கும் நிலையேற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதி மக்களுக்கான வாழ்வாதார கடன் வழங்கும் நிகழ்வு வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,சீ.யோகேஸ்வரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை,மா.நடராஜா மற்றும் சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் எம்.குணரெட்னம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சமுர்த்தி உதவி பெறும் மற்றும் சமுர்த்தி அற்றவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் திரியசவிய கடன் திட்டம் வழங்கப்பட்டுவருகின்றது.
இதன்கீழ் சுமார் 300 குடும்பங்களுக்கான கடனுதவிகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.





