குப்பிளான் தெற்கில் சிறார்களுக்கான முன்பள்ளிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்)
‘கிராமத்துக்கு ஒரு மில்லியன் ரூபா’ எனும் அரசின் நூறுநாள் செயற்திட்டத்தின் கீழ் குப்பிளான் தெற்குப் பகுதியில் சிறார்களுக்கான முன்பள்ளி அமைத்தல்,விவசாய சம்மேளனக் கட்டடம் புனரமைத்தல் ஆகிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இதன்படி வீரமனை குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையத்திற்கு அண்மையில் சிறார்களிற்கான முன்பள்ளி அமைப்பதற்கான அடிக்கல் நேற்று 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை நாட்டி வைக்கப்பட்டது.
குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையத் தலைவர் கு.விஜயகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் குப்பிளான் கன்னிமார் கௌரியம்பாள் ஆலய பிரதம குரு சி.கிருஷ்ணசாமிக்குருக்கள் அடிக்கல் நாட்டுவதற்கான கிரியைகளை ஆற்றினார்.அதனைத் தொடர்ந்து ஆலயத் தலைவரும்,கிராம சேவகருமான சோ.பரமநாதன்,குப்பிளான் தெற்குக் கிராம சேவகர் பே.மயூரதன்,கன்னிமார் கௌரி அம்பாள் ஆலய உப தலைவர் கு.நவரத்தினம்,பொருளாளர் கு.உதயகுமார்,குப்பிளான் தெற்கு மாதர் சங்கத்தின் பொருளாளர் திருமதி.ஜெ.சர்வானந்தன் உட்படப் பலரும் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தனர்.
குறிஞ்சிக்குமரன் முன்பள்ளி எனும் பெயருடன் நிறுவப்படவுள்ள குறித்த கட்டடத் தொகுதியைக் கட்டி முடிப்பதற்குப் பல இலட்சம் ரூபா நிதி தேவைப்படும் நிலையில் குப்பிளான் தெற்கு விவசாய சம்மேளனக் கட்டடப் புனரமைப்பு வேலைகளுக்கும் குறித்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதி சம தொகையாகப் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.இதன் காரணமாகக் குறித்த முன்பள்ளி அமைப்பதற்கான மீதித் தொகைப் பணத்தை புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு,உள்நாட்டு மக்களிடம் பெற்று கட்டட வேலையைப் பூர்த்தி செய்வதற்கு குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளதாக நிலையத் தலைவர் தெரிவித்தார்.
குப்பிளான் தெற்கு வீரமனைப் பகுதிலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் முன்பள்ளி நிறுவப்படாததன் காரணமாக இப் பகுதி மக்கள் தங்கள் சிறார்களுக்குக் கல்வி புகட்டுவதில் சிரமத்தை எதிர்கொண்டனர்.இந்த நிலையில் புதிதாக நிறுவப்படவுள்ள முன்பள்ளி தமது பிள்ளைகளுக்;கும்,எதிர்காலச் சந்ததியினருக்கும் பயனுள்ளதாக அமையுமென மேற்படி பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை,முன்பள்ளிக்கான கட்டட வேலைகள் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகித் தொடர்ந்தும் நடைபெறவுள்ளன.









