வவுனியா எழுத்தாளர்களின் நிதி அனுசரணையில் வலி.வடக்கு முகாம் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வகுப்புக்கள்
வவுனியா எழுத்தாளர்களின் நிதி அனுசரணையில் யாழ்.சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாம், கண்ணகி முகாம் ஆகிய நலன்புரி நிலையங்களில் உள்ள இவ்வருடம் புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான மாலை நேர கற்றல் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அத்துடன் அவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் ச.சஜீவன் கடந்த 10 ஆம் திகதி புதன்கிழமை கண்ணகி முகாமில் இடம்பெற்ற நிகழ்வின் போது வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் யாழ்.மாவட்டக் காணி அபிவிருத்தி மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன் விருந்தினராகக் கலந்து கொண்டதுடன் இரு முகாம் தலைவர்கள் மற்றும் மாணவர்கள்,பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
1990ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட இராணுவநடவடிக்கை காரணமாக வலிகாமம் வடக்கில் இருந்து இடம் பெயர்ந்து 25 வருடங்களாக அகதி முகாம்களில் வாழும் மாணவர்களின் கல்வி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இம்முகாம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இம்மாணவர்களின் வளர்ச்சியில் அக்கறைகாட்டாத நிலைமை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அன்றாடம் கூலி வேலை செய்து வரும் வருமானத்தில் தங்கள் குடும்பச் சுமையை நடத்துவதற்கு அல்லல்படும் இம் மக்கள் தங்கள் பிள்ளைகளை எவ்வாறு கல்வி கற்பிக்க முடியும்?இந்த நிலையில் முகாம மக்களின் தேவையை அறிந்த வவுனியா எழுத்தாளர்கள் அரும்புகள் அமைப்பின் ஊடாக உதவுவதற்கு முன்வந்தமை பாராட்டுதற்குரியது என சஜீவன் தெரிவித்தார். யாழ்.நகர் நிருபர்-







