யாழ்.ஏழாலையில் புதிதாக அறநெறிப் பாடசாலை அங்குரார்ப்பணம்
யாழ்.ஏழாலை மாதர் சங்கத்தினால் ஏழாலையிலுள்ள சிறார்கள் அனைவரையும் ஒன்றிணைத்து சமயம் சார்ந்த கல்வியை வழங்கும் வண்ணம் புதிதாக அறநெறிப் பாடசாலையொன்று அண்மையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்வு அண்மையில் ஏழாலை மேற்கு உதயசூரியன் சனசமூக நிலைய மண்டபத்தில் மாதர் சங்கத் தலைவி தலைமையில் இடம்பெற்றது.சுன்னாகம் கதிரமலைச் சிவன் தேவஸ்தான ஆலயப் பிரதமகுரு நாகேஸ்வரசர்மா சர்வேஸ்வரக் குருக்கள் ஆசியுரையுடன் ஆரம்பமான நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். வலி.வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் செ.செல்வராசா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். நிகழ்வில் சிறார்கள், பெற்றோர்கள், ஊரவர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
குறித்த அறநெறி வகுப்புக்கள் பிரதி ஞாயிறு தோறும் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.நகர் நிருபர்-







