ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழு இம்மாதம் இலங்கைக்கு விஜயம்
மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பாக ஆராய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதிகள் குழு இம்மாதம் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் தலையீட்டுடன் வெளிவிவகார அமைச்சு ஊடாக இந்த தடையை நீக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஐரோப்பிய ஒன்றியம் மீன் ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையை இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் நீக்கலாம் எனவும் கடற்றொழில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.




