தமிழ் முற்போக்கு கூட்டணி தலவாக்கலையில் சத்தியாகிரக போராட்டம்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூறியதுபோல 1000 ரூபாய் சம்பளத்தை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுகொடுக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு தலவாக்கலை நகரசபை மைதானத்தில் சத்தியாகிரக போராட்டம் முன்னெடுத்தனர். இப்போராட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வி.இராதாகிருஷ்ணன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது……
தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் கட்சியின் தலைவர் முத்து சிவலிங்கம் ஆகிய இருவரும் இம்முறை சம்பள உயர்வில் ஆயிரம் ரூபா வாங்கி தருவதாக வாக்குறுதி வழங்கினார்கள்.
நான்கு கட்ட பேச்சுவாரத்தையில் கூட்டு ஒப்பந்தத்தில் தொழிற் சங்கங்கள் ஏமாற்றமடைந்துள்ளது. இதனை பொருத்துக்கொள்ள எங்களால் முடியாது. இதனாலேயே இன்று நாங்கள் தலவாக்கலை நகரசபை மைதானத்தில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களான பி.திகாம்பரம், வீ.இராதாகிருஷ்ணன், மனோ கணேசன் ஆகியோர் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் நடைபெற்ற கூட்டு ஒப்பந்தத்தின் அதிக சம்பளம் பெற்று தருவதாக கூறி கொண்டு முதலாளிமார் சம்மேளனத்துடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தி மக்களை ஏமாற்றியது அணைவருக்கும் தெரிந்திருக்கும். இம்முறை பேச்சுவார்த்தையில் கூட அமைதியாக பேச்சுவார்த்தையை நடத்தி முடித்திருக்காலம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நினைத்திருந்தாலும் கம்பனிகாரர்கள் இவருடைய கோரிக்கைகளை செவிசாயிக்காத காரணத்தினாலேயே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தரப்பு இன்று சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
நாங்கள் ஒரு போதும் தோட்ட தொழிலாளிகளை காட்டி கொடுப்பவர்கள் அல்ல. அப்பாவி தொழிலாளர்களை எமாற்றுவதற்கு யார் நினைத்தாலும் அதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதில்லை. வாக்குறுதி வழங்கிய தொழிற்சங்க தலைவர்கள் ஆயிரம் ரூபா பெற்று கொடுக்கவிட்டால் சத்தியாகிரக போராட்டம் மற்றும் அல்லாது பாரியளவில் போராட்டங்களில் ஈடுப்படுவோம் என மேலும் தெரிவித்தார்கள்.







