தெறி முடிவல்ல…. ஆரம்பம்
இளைய தளபதி விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள தெறி திரைப்படம் முதல் பாகத்தோடு முடியவில்லையாம். அதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்க அட்லி திட்டமிட்டுள்ளதாக இரகசியம் ஒன்று வெளியாகியுள்ளது.
தற்போதுள்ள இளம் இயக்குநர்கள் மிகவும் உஷாரானவர்களாக இருக்கிறார்கள். தன்னுடைய திரைப்படம் ஓடினால் தான் அடுத்தத் திரைப்படம் கிடைக்கும் என்பதை மட்டுமல்ல, தனக்குக் கிடைக்கும் வெற்றியை வைத்து உடனடியாக பணம் சம்பாதிப்பது எப்படி என்பதையும் நன்கு தெரிந்து வைத்துள்ளனர்.
இப்படிப்பட்ட உஷாரான இயக்குநர்களின் அட்லியும் ஒருவர். கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் விஜய், சமந்தா, எமி ஜெக்சன், இயக்குநர் மகேந்திரன் நடிக்கும் தெறி திரைப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தெறி டீஸர் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டு யூடியூப்பில் இந்திய அளவில் மிகப்பெரும் சாதனை படைத்து வருகிறது.
ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி வெளியிட உள்ளனர். தெறி திரைப்படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. அதற்கு முன்னதாக எடிட்டிங், டப்பிங் பணிகள் நடைபெற்றபோது தெறி குறித்த இரகசியம் ஒன்று கசிந்துள்ளது. அதாவது, தெறி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்பதை இரசிகர்களுக்கு சொல்லும் வகையில் தெறி இரண்டாம் பாகத்தில் சந்திப்போம் என்ற வாசகத்துடன் தெறி திரைப்படம் முடிவடைகிறதாம்.
தெறி முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் விஜய், மீனாவின் மகள் நைனிகா, எமி ஜெக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்க போவதாக கதையை முடித்திருக்கிறாராம் அட்லி.
N5




