செய்திகள்
கல்விச் சமூகம் முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும்
கிளிநொச்சி மாவட்ட பாடசாலையொன்றில் ஏற்பட்ட சம்பவமொன்றையடுத்து மாணவி ஒருவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ள விடயம் எமது சமூகத்தில் இடம்பெற்றுள்ள மிகவும் துரதிஷ்டவசமான சம்பவமாகும். எமது சமுதாயத்திற்கு வழிகாட்டிகளாகத் திகழ வேண்டிய கல்விச் சமூகமானது இவ்வாறான முறைகேடுகளில் ஈடுபடுவதானது, வன்மையாகக் கண்டிக்கத்தக்க விடயமாகுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், இச் சம்பவத்தில் தொடர்புடையவர் எனக் கூறப்படும் ஆசிரியர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார் என அறிய முடிகிறது. இச் சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது இப் பாடசாலை கல்விச் சமூகத்தினரும், குறிப்பிட்ட ஆசிரியரின் உறவினர்களும் அச்சுறுத்தல்களை விடுத்துள்ளதாகவம் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கும் கலாசாரம் எமது சமூகத்தைவிட்டு வேரோடு அகற்றப்பட வேண்டும். அது தொடருமானால், எமது சமூகத்தால் நிம்மதியாக வாழ முடியாது. எமது சமுதாயத்திற்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டியவர்கள் இவ்வாறான முறைகேடுகளில் ஈடுபடுவது ஆரோக்கியமான விடயமல்ல.
அதே நேரம், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் செய்திகளை வெளியிடுகின்ற ஊடகவியலாளர்கள், அச் சம்பவங்கள் எமது சமூகத்தில் மேலும் தொடர்வதற்குத் தூண்டும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்ளாது, சமூக பொறுப்புணர்வுடன், அவ்வாறான சம்பவங்களுக்கெதிரான விழிப்புணர்வுகளை சமூகத்தில் ஏற்படுத்தும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
n10




