மனித உரிமைகளின் அவசியத்தை இலங்கையில் வலியுறுத்திய பாப்பரசர்
மனித இறைமை மற்றும் மனித உரிமைகளுக்கான மதிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதும் உட்கட்டுமானம் மற்றும் பௌதிகரீதியான தேவைகளை நிறைவேற்றுவதும் அத்தியாவசியமானவை என்று இலங்கை வந்தடைந்த பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் தெரிவித்திருக்கிறார்.
இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர் அங்கு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்ததுடன் சகல இலங்கையர்களுக்கும் ஒரே குடும்பம்போல வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
பல்லினத் தன்மை என்பது ஒரு அச்சுறுத்தலான விடயம் அல்ல என்றும், மாறாக முன்னேற்றத்துக்கான ஒன்று என்றும் அதனால், ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளவும் நியாயபூர்வமான பல்லினத்தன்மைகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கவேண்டும் என்றும் அவர் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றியபோது தெரிவித்தார்.
புனித பாப்பரசசரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியின் பாரியார், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் அவருக்கு இராணுவ மரியாதை அளிக்கப்பட்டதுடன் பாப்பரசருக்கான தேசிய கீதமும் இலங்கையின் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. பின்னர் அவர் கட்டுநாயக்கவிலிருந்து திறந்த ரத பவனியாக நீர்கொழும்பு – கொழும்பு வீதியூடாக பாப்பரசர் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார்.
உன்று மாலை 5.00 மணிக்கு சர்வ மதத் தலைவர்களை சந்திக்கவிருப்பதுடன் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சிறப்புரையொன்றையும் பாப்பரசர் ஆற்றவுள்ளார்.இதன்பின்னர் ஜனாதிபதியை அவரது ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.
கொழும்பு காலி முகத்திடலில் நாளை 14 ஆம் திகதி இலங்கைக்கான முதலாவது புனிதரை உத்தியோக பூர்வமாக உலக திருச்சபையின் தலைவரான பரிசுத்த பாப்பரசர் அறிவிக்கும் நிகழ்வு இடம்பெறும். இந்த நிகழ்வும் இலட்சக் கணக்கான மக்கள் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை அவர் மடு திருத்தளத்துக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் சுமார் பத்து இலட்சம் மக்கள் கலந்துகொள்ளவிருக்கும் மாபெரும் மத வழிபாடு ஒன்றை நடத்துவார்.













