பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் உடன் விடுவிக்க வேண்டும்
கிளிநொச்சி இராணுவ முகாமுக்குள் சம்பந்தன் உள்ளிட்டவர்கள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். இராணுவத்தினரிடம் உள்ள பொதுமக்களின் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
போர் முடிந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னரும், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீடுகளைப் பார்வையிடவே, சம்பந்தன் அந்தப் பகுதிக்குச் சென்றார்.
ஏ-9 வீதிக்கு கிழக்காக அமைந்துள்ள அந்தப் பகுதியில், இராணுவத்தினரின் வசமுள்ள வீடுகளின் உரிமையாளர்கள் சிலரும் சம்பந்தனுடன் அங்கு சென்றிருந்தனர்.
காவலில் இருந்த இராணுவத்தினர், தான் வீதித் தடையை திறந்து விட்டனர். அப்படியிருக்க, சம்பந்தன் அத்துமீறி முகாமுக்குள் நுழைந்தார் என்று கூறுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு.
இந்தச் சம்பவத்தை வைத்து இரா. சம்பந்தனின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முனைபவர்கள், தமது சொத்துக்களை இராணுவத்தினர் பறித்து வைத்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளவர்களைப் பற்றி மூச்சு விடுவதில்லை.
சம்பந்தனுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருபவர்கள் உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இனிமேலும் தாமதியாமல் கிளிநொச்சியில் உள்ள வீடுகளை இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும்.
n10




