மண்சரிவினால் பாதிக்கப்பட்ட களுபஹனவத்த தோட்டத்திற்கு 100 தனிவீடுகள்
கேகாலை புளத்கோபிட்டிய களுபஹனவத்த தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் மண்சரிவு அபாயத்தை எதிர்யோக்கியுள்ள குடும்பங்களுக்குமான 100 தனிவீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
களுபஹனவத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் தோட்டக்குடியிருப்பொன்றைச் சேர்ந்த 16 பேர் உயரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் 14 உடலங்கள் மீட்கப்பட்டன. இரண்டு சடலங்கள் மீட்க முடியாத நிலைமை ஏற்பட்டதால் இராணுவத்தினர் மீட்பு பணிகளை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.
மண்சரிவினாலும் மண்சரிவு அபாயத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 80 க்கும் மேற்பட்டோர் பாடசாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களை 20.05.2016 அன்று அமைச்சர்களான பழனி திகாம்பரம், மனோகணேசன், கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய பெரேரா, மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் உட்பட்ட முக்கியஸ்தர்கள் களுபஹனவத்த தோட்டத்துக்கு விஜயம் செய்து சந்தித்தனர். அத்துடன் மண்சரிவு ஏற்பட்ட பிரதேசத்துக்கும் சென்று பார்வையிட்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அமைச்சர் திகாம்பரம் பேசுகையில் கூறியதாவது :
களுபஹனவத்த தோட்டத்தில் மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கு எனது அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளேன்.இந்தத் தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள குடும்பங்களுக்கும் பாதுகாப்பான இடத்தில் 100 தனி வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன்.
இந்த வீடுகள் இலவசமாக வழங்கப்படும். இந்த வீடமைப்புத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜீன் மாதம் 5 ஆம் திகதி இடம் பெறவுள்ளது. இதே போல மலையகத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். எமக்கு அரசியல் அதிகாரம் கிடைத்துள்ள குறுகிய காலத்தில் மக்களின் தேவை அறிந்து சேவை செய்யக்கூடிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. ஆகவே கொடுத்த வாக்குறுதி வழங்குவதில் நாம் எப்போதும் கவனமாக செயற்படுவோம்.
அமைச்சர் மனோகணேசன்
களுபஹனவத்த தோட்டத்தில் மண்சரிவினால் உயிரிழந்த உறவுகளுக்கு எனது ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நானும் அமைச்சர் திகாம்பரமும் ஒன்றாக வந்து பாதிப்புக்களை ஆராய்ந்துள்ளோம். உடனடியாக வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
களுபஹனவத்த தோட்டப்பகுதி மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதால் இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த அனைவருக்கும் பாதுகாப்பான இடத்தில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும். நாம் புதிய அரசாங்கத்தை ஏற்படுத்தி குறுகிய காலம் என்றகின்ற போதும் அந்தக்குறுதிய காலத்தில் நிறைய சேவைகளைச் செய்து வருகின்றோம்.

n10




