செய்திகள்

கூட்டமைப்பின் கருத்துக் கணிப்பில் ஓமந்தைக்கே பெருமளவு ஆதரவு

வடக்கு பொருளாதார  மத்திய நிலையம் எங்கு அமைக்கப்பட வேண்டுமென்பது தொடர்பில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் ஓமந்தைக்கே அதிகளவானவர்கள் விருப்பத்தை வெளியிட்டுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் கூட்டமொன்று இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் பங்குபற்றிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஓமந்தையிலா அல்லது தாண்டிக்குளத்திலா இந்த நிலையம் அமைய வேண்டுமென்பது தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைத்தனர். இந்நிலையில் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பிலான அமைவிடம் தொடர்பில் கூட்டமைப்பின் மாகாண சபை மற்றும் வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டதுடன் ஒரு வாரத்துக்குள் முடிவு எடுப்பதாகவும் முடிவு செய்யப்பட்டது.

இதனடிப்படையில் தங்கள் விருப்பங்களை அனுப்புமாறு தமிழ் கூட்டமைப்பின் 30 மாகாணசபை உறுப்பினர்களுக்கும் கூட்டமைப்பின் 10 வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வடக்கு முதலமைச்சர் கடிதங்களை அனுப்பியிருந்தார். இதன் பிரகாரம் அதிகூடியவர்கள் ஓமந்தையில் அமைக்கப்பட வேண்டுமென தமது தனிப்பட்ட கருத்தினை அனுப்பியுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தனர்.

வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களில் அதிகமானவர்கள் ஓமந்தையில் இந்த நிலையம் அமைக்கப்பட வேண்டுமெனக் கூறியுள்ளதாக தகவல் தந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன. இதேவேளை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் காணிகளை பார்வையிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை 2010 ஜூன் 5 ஆம் திகதி  வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட சுமார் 20 ஏக்கர் வேப்பங்குளம், ஓமந்தையிலுள்ள காணி, ஓமந்தை மாணிக்கவளவு காணி மற்றும் தாண்டிக்குள காணிகள் பார்வையிடப்பட்டன. இவ்வாறான நிலையில் வடக்கு முதலமைச்சரை காணிகளை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இன்று சந்திக்கவுள்ளதாக தகவல் தந்த தரப்பினர் குறிப்பிட்டனர்.