இந்திய உதவியுடன் பலாலி விமானத் தளத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிடவில்லை: ரணில்
யாழ் பலாலி விமானத்தளத்தை இந்தியாவின் உதவியுடன் பிராந்திய விமானத்தளமாக அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.
இன்று நாடாளுமன்றம் கூடிய போது கேள்வியொன்றை எழுப்பிய மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க, பலாலி விமானத்தளத்தை பிராந்திய விமானத்தளமாக அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் ஒப்பந்தமொன்று ஏற்படுத்திக்கொள்ளப் பட்டுள்ளதா? என்று வினவினார்.
அதற்கு பதில் வழங்கிய பிரதமர் விக்கிரமசிங்க இவ்வாறான ஒப்பந்தங்கள் எதுவும் இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை என்று அறிவித்தார். மேலும் கேள்வியொன்றை எழுப்பிய உறுப்பினர் பிமல் ரத்னாயக்க, பலாலி விமானத்தளத்தை அபிவிருத்தி செய்வது சம்பந்தமாக இந்திய சிறப்பு குழுவொன்று இலங்கை வந்து ஆய்வொன்றை மேட்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
அமைச்சரவையின் அனுமதியின்றி இவ்வாறான ஆய்வொன்றை மேற்கொள்ள முடியாதென்று அறிவித்த பிமல் ரத்னாயக்க இதற்கு அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டதா? என்று கேள்வியொன்றை எழுப்பினார்.
அதற்கு பதில் வழங்கிய பிரதமர் விக்கிரமசிங்க இவ்வாறான ஆய்வொன்று நடத்தப்பட்டதாக ஏற்றுக்கொண்டார். இவ்வாறான ஆய்வொன்றை மேற்கொள்வதற்கு அமைச்சரவையின் அனுமதி அவசியமில்லை என்று பிரதமர் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
-06




