தமிழகம் முழுவதும் நாளை முழு கடையடைப்பு; 90,000 பொலிஸார் பாதுகாப்புப் பணியில்
காவிரி நீர் விநியோகம் தொடர்பில் இந்திய மாநிலங்களான கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிற்கிடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை காரணமாக அவ்விரு மாநிலங்களிலும் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், கர்நாடகாவில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைக் கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கம் ஆகியன இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
கடையடைப்புப் போராட்டத்திற்கு திமுக, பாமக, தமாகா, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பால் முகவர் தொழிலாளர்கள் நலச்சங்கம், தமிழக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம், தனியார் பள்ளிகளும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளன.
கடையடைப்பு, ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 90,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வன்முறையில் ஈடுபடுபவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
n10




