ஜெயலலிதாவுக்கு திடீர் சுகவீனம்: அப்பலோ மருத்துவமனை முன் நள்ளிரவில் குவிந்த மக்கள்
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திடீர் சுகவீனமுற்று சென்னையிலுள்ள மருத்துவமனை ஒன்றில் நேற்று வியாழக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான செய்தி பரவியதையடுத்து அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் நள்ளிரவே மருத்துவமனை முன்பாக கூடத் தொடங்கிவிட்டனர்.
வியாழக்கிழமை இரவு போயஸ் கார்டனில் தமிழக முதல்வர் ஜெயலலிதா காவிரி பிரச்னை குறித்த ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார். அதில் காவல் துறை உயர் அதிகாரிகள், துறை செயலாளர்கள் கலந்துக் கொண்டனர். கூட்டம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும்போதே 9.30 மணியளவில் ஜெயலலிதாவிற்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு இருக்கிறது.

முதலில் தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் அவரை அனுமதிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கின்றனர். ஒரு சிறிய ஆலோசனைக்கு பின், 10. 15 மணிக்கு அவரை கிரீம்ஸ் ரோடு அப்போலோவில் அனுமதித்து இருக்கிறார்கள்.

முதல்வர் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியதால், நள்ளிரவு ஒரு மணி அளவில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், அவரது உடல்நிலை குறித்த செய்தி குறிப்பை வெளியிட்டது. அதில், “திடீர் காய்ச்சலின் காரணமாகவும், உடலில் நீர்சத்து குறைந்ததன் காரணமாகவும், முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்போது நலமாக இருக்கிறார். மருத்துவர்கள் தொடர்ந்து அவர் உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள்” என்று குறிப்பிட்டு இருந்தனர்.

வியாழக்கிழமை இரவு 9 மணி: போயஸ் கார்டனில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் காவல் துறை உயர் அதிகாரிகள், துறை செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
9. 30 மணி: முதல்வருக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது.
10. 15 : ஜெயலலிதா சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். உடன் சசிகலா இருக்கிறார். சிறிது நேரத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலைராஜன் வருகிறார்.
https://www.youtube.com/watch?v=qc6GJU50m0M
10.30 : கிரீம்ஸ் ரோடு சாலையில் அதிகளவில் காவலர்கள் குவிக்கப்படுகிறார்கள்.
1. 00: அப்போலோ மருத்துவ நிர்வாகம் ஜெயலலிதா உடல்நிலை குறித்து செய்தி குறிப்பு வெளியிடுகிறது.
1.05: முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வருகிறார்கள்.
1:10: தொண்டர்கள் குவிகிறார்கள்.
1. 30 : கீரிம்ஸ் ரோடு சாலை மூடப்படுகிறது
1. 40 : சைதை துரைசாமி மருத்துவமனைக்கு வருகிறார்.
2.05: முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் வருகிறார்.
2.30: அமைச்சர் ஜெயக்குமார் வருகிறார்.
3.00: தலைமைச் செயலாளர் ராம் மோக்ன் ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், காவல் துறை டி.ஜி.பி டி.கே. ராஜேந்திரன் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார். முதல்வரின் சிறப்பு அதிகாரி சாந்த ஷீலா நாயர் மருத்துவமனைக்கு வந்தார்.
3.16: சிறிது நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையிலிருந்து புறப்பட்டுவிடுவார் என தகவல். கான்வாய் வாகனங்கள் மருத்துவமனை வாசலில் தயாராக இருக்கிறது.
3.30: சாந்த ஷீலா நாயர் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார்.
3.45: காலை 7 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரம் தகவல்.
அதிகாலை 5 மணி : முன்னாள் அமைச்சர் சின்னய்யா, முன்னாள் காவல் துறை அதிகாரியும் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான நட்ராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் நவநீத கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு வந்தனர்.
-06




