கிளிநொச்சியில் மருதநில மரங்களின் மாதிரிப் பூங்கா
வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் மருதம் என்ற பெயரில் மருதநிலத் தாவரங்களின் மாதிரிப் பூங்காவொன்றை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சங்க இலக்கியங்கள் இயற்கைச் சூழலை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகைத் திணைகளாக வகைப்படுத்தியுள்ளது. இத்திணைகளில் ஒன்றான வயலும் வயல் சார்ந்த சூழலுமாகிய மருதநிலத்துக்கான தாவரங்களுக்குரிய மாதிரிப் பூங்காவொன்றே இரணைமடு இடதுகரை வாய்க்கால் வீதியை ஒட்டியதாக நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது.
வடமாகாண மரநடுகை மாதம் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுக்கு அமைவாகக் கார்த்திகை மாதம் பூராகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக இயற்கையாகவே வளரும் உள்@ர் மரங்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு ‘ சொந்த மண் சொந்த மரங்கள்’ என்பது தேர்வு செய்யப்பட்டுள்ளது. இக்கருப்பொருளுக்கு அமைவாகவே மருதநிலத்துக்குரிய தாவரங்களைத் தேர்வு செய்து மாதிரிப் பூங்காவை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண மரநடுகை மாதத் தொடக்க நிகழ்ச்சி நேற்று செவ்வாய்க்கிழமை (01.11.2016) கிளிநொச்சியில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மருதம் பூங்கா என்ற பெயர்ப்பலகையைத் திரை நீக்கம் செய்து வைத்ததோடு, பூங்கா நிலத்தின் உள்ளேயே முதல் மரக்கன்றை நாட்டி வைத்து மரநடுகை மாதத்தை ஆரம்பித்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. :06




